இந்தியாவில் ஒரே நாளில் 7,830 பேருக்கு கொரோனா
1 min read
7,830 people infected with Corona in a single day in India
12.4.2023
இந்தியாவில் கடந்த 223 நாட்களில் இல்லாத அளவில் கொரோனா உயர்ந்துள்ளது. ஒரு நாளில் 7,830 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் இன்று புதிதாக 7,830 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று பாதிப்பு 5,676 ஆக இருந்த நிலையில் இன்று கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி நிலவரப்படி பாதிப்பு 7,946 ஆக இருந்தது. அதன் பிறகு கடந்த 223 நாட்களில் இல்லாத அளவுக்கு தற்போது ஒரு நாள் பாதிப்பு உயர்ந்துள்ளது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 1,881 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் 919, டெல்லியில் 980, அரியானாவில் 595, தமிழ்நாட்டில் 401, உத்தரபிரதேசத்தில் 402, குஜராத்தில் 364, இமாச்சல பிரதேசத்தில் 420, கர்நாடகாவில் 245, ஒடிசாவில் 212, ராஜஸ்தானில் 190, சத்தீஸ்கரில் 264, பஞ்சாப்பில் 185, ஜார்கண்டில் 108, கோவாவில் 140 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 76 ஆயிரத்து 2 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 4,692 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 42 லட்சத்து 4 ஆயிரத்து 771 பேர் குணமடைந்துள்ளனர். ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 40,215 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை நேற்றை விட 3,122 அதிகமாகும். கொரோனா பாதிப்பால் நேற்று டெல்லி, இமாச்சல பிரதேசம், பஞ்சாப்பில் தலா 2 பேர், குஜராத், அரியானா, மகாராஷ்டிரா, சிக்கிம், உத்தரபிரதேசத்தில் தலா ஒருவர் என 11 பேர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட மரணங்களில் 5-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 16 ஆக உயர்ந்துள்ளது.