ஓமன் அருகே 24 இந்திய சிப்பந்திகளுடன் சென்ற அமெரிக்க எண்ணை கப்பலை சிறைப்பிடித்த ஈரான் கடற்படை
1 min readIranian navy seizes US oil tanker with 24 Indian crew members near Oman
28.4.2023
ஓமன் அருகே 24 இந்திய சிப்பந்திகளுடன் சென்ற அமெரிக்க எண்ணை கப்பலை ஈரான் கடற்படை சிறைப்பிடித்தது.
எண்ணை கப்பல்
அமெரிக்காவுக்கு சொந்தமான எண்ணைக்கப்பல் குவைத்தில் இருந்து ஹூஸ்டன் நகருக்கு சென்று கொண்டு இருந்தது. இந்த கப்பலில் 24 இந்திய சிப்பந்திகள் உள்ளிட்ட ஊழியர்கள் இருந்தனர். அந்த கப்பல் ஓமன் தலைநகர் மஸ்கட் அருகே கடற் பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த ஈரான் கடற்படை வீரர்கள் அமெரிக்க எண்ணைக்கப்பலை சிறைப்பிடித்தனர்.
ஈரான் கடற்பகுதிக்குள் கப்பல் நுழைந்ததாக கூறி அந்நாடு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அமெரிக்கா தனது எதிர்ப்பை தெரிவித்து உள்ளது. தங்கள் நாட்டு கப்பல் சர்வதேச எல்லையில் பயணித்த போது ஈரான் சிறை பிடித்து உள்ளதாகவும், இது சர்வதேச சட்டம், மற்றும் பிராந்திய பாதுகாப்பு நிலை தன்மைக்கு எதிரானது, இதனால் உடனடியாக எண்ணை கப்பலை ஈரான் விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளது.
முதலில் ஈரான் துணை ராணுவம் தான் கப்பலை கைப்பற்றியதாக தகவல் வெளியானது. பின்னர் தான் ஈரான் இந்த செயலில் ஈடுபட்ட விவரம் தெரியவந்தது. இந்த நிலையில் பெர்சியன் கடற்பகுதியில் ஈரான் நாட்டு கப்பலுடன் அடையாளம் தெரியாத கப்பல் ஒன்று மோதியதாகவும், இந்த சம்பவத்தில் ஈரான் சிப்பந்திகள் காயம் அடைந்ததாகவும், பலர் மாயமாகி விட்டதாகவும் அங்குள்ள செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. ஆனால் ஈரான் நாட்டு கப்பல் மீது எந்த கப்பல் மோதியது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. ஈரான் கடற்கரை பகுதியில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் வணிகத்துக்காக பயன்படுத்தப்பட்டு வரும் 5 கப்பல்கள் சிறைப்பிடிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கும் நிலவுகிறது.
இந்த சூழ்நிலையில் ஈரான் கடற்படை அமெரிக்க எண்ணைக்கப்பலை சிறை பிடித்துள்ளது மேலும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.