அரசு அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
1 min readM.K.Stal’s instructions for government officials to work together
27.4.2023
விழுப்புரத்தில் இன்று காலை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். வளர்ச்சி திட்ட விவகாரத்தில் அரசு அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
மு.க.ஸ்டாலின்
“கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று அவர் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதற்காக நேற்று மதியம் சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக விழுப்புரத்துக்கு வந்தார். தொடர்ந்து மாலையில் விழுப்புரத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற 3 மாவட்டங்களை சேர்ந்த குறு மற்றும் சிறு தொழில் சங்கம், திண்டிவனம் வெண்மணியாத்தூர் சிட்கோ தொழில்முனைவோர் சங்கம், கடலூர் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, ஈ.ஐ.டி. பாரி கரும்பு விவசாயிகள் சங்கம், சிறு, குறு முதலீட்டாளர்கள், மீனவ பிரதிநிதிகள், கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலம் அரிசி ஆலை அதிபர் சங்கங்கள், விவசாய சங்கபிரதிதிநிதிகள் என்று பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடி, அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.
2-வது நாள்
இந்நிலையில், இன்று 2-வது நாளாக விழுப்புரத்தில் நடைபெற்ற முகாமில் 3 மாவட்ட அரசு அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை திட்டங்களின் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
வேலூரில் முதலில் கள ஆய்வுக்கும் அடுத்தடுத்த ஆய்வுக்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளது. முதலமைச்சர் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என அதிகாரிகள் துரிதமாக செயல்படுகின்றனர். ஒவ்வொரு திட்டங்களிலும் என்ன முன்னேற்றம் உள்ளது என்பது குறித்து அறிய முடிகிறது. 3 மாவட்டங்களிலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை வேகப்படுத்துங்கள். அரசுக்கு நற்பெயர் பெற்று தரும் அளவிற்கு அதிகாரிகள் செயல்பாடு இருக்க வேண்டும். மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தை விவசாயிகள் பயன் அடையும் வகையில் செயல்படுத்துங்கள். மக்களுக்காக செயல்படுத்தப்படும் பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களில் கவனம் தேவை. வளர்ச்சி திட்ட விவகாரத்தில் அரசு அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அரசின் திட்டங்கள் மாவட்ட அதிகாரிகளாகிய உங்கள் மூலமே செயல்படுத்தப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.