சங்கரன் கோவில் அருகே வாகனம் மோதி தலைமை காவலர் பலி-21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை
1 min read
Police killed in vehicle collision near Sankaran Temple – 21 bombs rang out last rites
10.5.2023
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள அய்யாபுரம் காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக பணிபுரிந்து வந்த பாலசுப்பிர மணியன் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு பனவடலிசத்திரம் பகுதியைச் சார்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 35) இவர் அய்யாபுரம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார்.
பாலசுப்பிரமணியன் தனது குடும்பத்தினருடன் சங்கரன்கோவில் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பாலசுப்பிரமணியன் வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சங்கரன்கோவில் அருகே முத்துகிருஷ்ணாபுரம் ஊருக்கு வடபுறம் உள்ள கருப்பசாமி கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது இதில் தூக்கி வீசப்பட்ட பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதைப் பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சின்ன கோவிலாங்குளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து பாலசுப்பிரமணியன் மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தகவல் அறிந்த தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாம்சன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பாலசுப்பிரமணியன் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மேலும் எஸ்பி சாம்சன் உத்தரவின் பேரில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பாலசுப்பிரமணியன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும் விபத்தில் பலியான தலைமை காவலர் பாலசுப்பிரமணியன் சொந்த ஊரான வடக்கு பணவடலிசத்திரத்தில் 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.. இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன், மற்றும் தென்காசி மாவட்ட காவல் துறையினர் திரளாக கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
சங்கரன்கோவில் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் போதி தலைமை காவலர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.