கள்ளச் சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் ஏன்? – அமைச்சர் பொன்முடி விளக்கம்
1 min read
Why relief of Rs.10 lakh to the family of those who died due to fake liquor? – Minister Ponmudi explained
16/5/2023
கள்ளச் சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் ஏன்? என்பதற்கு அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.
கள்ளச்சாராயம்
விழுப்புரம் அருகே மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதன்படி, உயிரிழந்த 12 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் செவ்வாய்க்கிழமை வழங்கினர். பின்னர் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “இந்த 10 லட்சம் நிவாரண உதவி வழங்கியதற்கு எதிர்க்கட்சிகாரர்கள் ‘குடித்துவிட்டு இறந்தவர்களுக்கு எல்லாம் ஏன் 10 லட்சம் ரூபாய் கொடுக்கிறீர்கள்?’ என்று கேட்கின்றனர்.
ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை என்பது கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்களுக்காக கொடுக்கப்படுவது அல்ல. சாராயம் குடித்து இறந்தவரின் குடும்பம் ஏழைக் குடும்பமாக இருக்கிறது. மீனவர்கள், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்களாக இருக்கின்றன. எனவேதான், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
நிவாரணத் தொகை வழங்குவதை அரசியலாக்க வேண்டும் என்ற எண்ணம் முதல்வருக்கும் கிடையாது; எங்களுக்கும் கிடையாது. அரசியலுக்கு அப்பாற்பட்டு, இதுபோன்ற கள்ளச் சாராயங்கள் விற்பனை செய்யப்படக் கூடாது என்பதுதான் தமிழக முதல்வரின் நோக்கம். அதற்கான நடவடிக்கைகளை துரிதமாக அவர் எடுத்து வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.