நெட்டூர் கோவில் கும்பாபிஷேகம் நடத்த அமைச்சர் சேகர்பாபுவிடம் கோரிக்கை
1 min read
Request to minister Shekharbabu to conduct kumbabhishekam in Nettur temple
17.5.2023
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் சுப்பிரமணியசுவாமி- அப்ரானந்த சுவாமி கோயிலுக்கு கும்பாபிசேகம் நடத்திட வேண்டும்என அமைச்சர் சேகர்பாபுவிடம், திமுக மாவட்ட செயலாளர் பொ.சிவபத்மநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் யூனியன் சேர்மன் எம்.திவ்யாமணிகண்டன் மற்றும் நெட்டூர் பகுதி பொதுமக்கள் அளித்த மனுவின் அடிப்படையில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நெட்டூர் கிராமத்தில் பழமை வாய்ந்த சுப்பிரமணியசுவாமி, அப்ரானந்த சுவாமி கோயில் அமைந்துள்ளது. 17ஆம் நூற்றாண்டை சேர்ந்த இக்கோயிலில் அமைந்துள்ள அருள்மிகு அப்ரானந்த சுவாமி சித்தர்பீடமானது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மேலும் இங்கு சுப்பிரமணியவாமி, அப்ரானந்தசுவாமி, வள்ளி-தெய்வானை சன்னதிகளும், விநாயகர், தட்சணாமூர்த்தி, சாஸ்தா, நாகர், பாலமுருகன், இருளகற்றி அம்பாள், முப்புடாதிஅம்மன், சண்டிகேஸ்வரர், காலபைரவர், நவக்கிரகங்கள், உப சன்னதிகளும உள்ளன. இக்கோயிலில் சிவாகம முறைப்படி 4 கால பூஜைகள் நடைபெறுகின்றன.
இங்கு நடைபெறும் வைகாசி விசாகம், ஆனி குருபூஜை, தைப்பூசம் ஆகிய திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்ததாகும். தமிழகம் முழுவதிலும் இருந்தும் இக்கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இச்சிறப்பு மிக்க இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. எனவே கும்பாபிஷேகம் நடத்திட வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே கும்பாபிஷேகம் நடத்திட ஏற்பாடு செய்திட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் சேகர்பாபு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி வருகிற ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
அப்போது, தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, தொழிலதிபர் மணிகண்டன், செங்கோட்டை நகர செயலாளர் வக்கீல் வெங்கடேசன் பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன்,வெய்க்காலிபட்டி பரமசிவன் மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர்சொட்டு சுப்பிரமணியன்,குற்றாலம் பேரூராட்சி கவுன்சிலர் கிருஷ்ணராஜா, பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தளபதிவிஜயன், கீழப்பாவூர் பேரூர் பொருளாளர் தெய்வேந்திரன், ஆலங்குளம் வடக்கு ஒன்றிய உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் அருணா பாண்டியன், வின்ஸ்டன் , பிரபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.