வாசுதேவநல்லூர் அருகே லாரி – கார் மோதிய விபத்தில் 2 பேர் பலி
1 min read
2 killed in truck-car collision near Vasudevanallur
20.5.2023
வாசுதேவநல்லூர் அருகே டாரஸ் லாரியின் பின்பக்கம் கார் மோதிய விபத்தில் இருவர் பரிதாபமாக இருந்தனர். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர் .
விபத்து
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே உள்ள நாரணபுரம் மடத்து தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் அண்ணாமலை (வயது 45). இவர் உட்பட 5பேர் இன்று அதிகாலை 3 அளவில் காரில் வாசுதேவநல்லூர் அருகே சிந்தாமணிபேரி புதூர் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த சிமெண்ட் லோடு ஏற்றிச் சென்ற டாரஸ் லாரியின் பின்பக்கம் திடீரென கார் மோதியது.
இந்த விபத்தில் காரில் இருந்த அண்ணாமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.மேலும் காரில் பயணம் செய்த சாம்பவர் வடகரை மேல ரத வீதியை சேர்ந்த பரமசிவன் மகன் மாரியப்பன் (வயது 55), இவரது மனைவி மாரியம்மாள் (வயது 50), நாரணபுரம் கோசலிங்கம் மனைவி கனியம்மாள் (வயது 70), கரடிகுளம் கீழத் தெருவை சேர்ந்த கார் டிரைவர் வெள்ளத்துரை (55) ஆகிய நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்த நான்கு பேரும் புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாரியப்பன் பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவம் குறித்து வாசு தேவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. ஆய்வாளர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அண்ணாமலை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வாசுதேவநல்லூர் காவல்நிலைய ஆய்வாளர் சண்முகசுந்தரம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.