நடிகர் சரத்பாபு மரணம்
1 min read
Actor Sarathbabu passed away
22.5.2023
நடிகர் சரத்பாபு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
சரத்பவார்
பிரபல நடிகர் சரத்பாபு (வயது 71) உடல்நலக்குறைவு காரணமாக இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார். 1973 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு. அதன்பின்னர், தமிழில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் அறிமுகமானார். 70,80 களில் முன்னணி நடிகராக வலம் வந்த அவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கமல், மற்றும் ரஜினி, சிரஞ்சீவி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது. நடிகர் சரத்பாபு மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பாடல்கள்
தமிழில் கவனத்துக்குரிய நடிகரான சரத்பாபுவின் காலத்தால் அழியாத பாடல்களின் தொகுப்பை பார்ப்போம்.
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் – முள்ளும் மலரும் (1978): இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ரஜினி, சரத்பாபு, ஷோபா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்த இப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா’ பாடல் எவர் கிரீன் ஹிட். பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்திழுத்தன. கண்ணதாசன் பாடல் வரிகளில் யேசுதாஸ் குரலில் உருவான இப்பாடல் சரத்பாபுவின் திரைப்பயணத்தில் முக்கியமான பாடல்.
நான் உன்ன நெனைச்சேன் – கண்ணில் தெரியும் கதைகள் (1980): தேவராஜ் மோகன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சரத்பாபு, ஸ்ரீபிரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சங்கர் கணேசன் இசையில் வாலி எழுதிய காதல் வரிகளை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, வாணி ஜெய்ராம் செம்மைபடுத்தியிருப்பர். மெலோடியான இப்பாடல் காதலர்களிடையிலான பிரிவை அழகாக சொல்லியிருக்கும்.
கடவுள் நினைத்தான் – கீழ்வானம் சிவக்கும் (1981): இயக்குநர் முக்தா சீனிவாசன் இயக்கத்தில் சிவாஜி, சரிதா, ஜெய்சங்கர், சரத்பாபு நடித்த இந்தப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசைமைத்திருந்தார். டி. எம். சௌந்தரராஜன் பாடும் இந்தப்பாடல் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. ஒரு காலத்தில் இப்பாடல் இடம்பெறாத திருமண வீடுகளே இல்லாத அளவுக்கு பிரபலமடைந்த பாடல். ‘மண மேடை தந்த மலர் போன்ற பெண்மை மணவாளன் கையில் விளையாட்டு பொம்மை’ போன்ற கண்ணாதாசனின் வரிகள் கவனம் பெற்றன.
ஒரு நண்பனின் கதை இது – சட்டம் (1983): கே.விஜயன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் கமல்ஹாசன், மாதவி, சரத்பாபு, சில்க் ஸ்மிதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கங்கை அமரன் இசையமைத்திருந்த இப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘ஒரு நண்பணின் கதை இது’ பாடல் பிரபலமானது. நெருங்கிய நண்பனை குத்திக்காட்டும் வகையிலான வாலியின் வரிகள் கூர்மையாக பாடலுக்கு அழகூட்டியிருக்கும்.
சின்ன சின்ன பூவே – சங்கர் குரு (1987): எல்.ராஜா இயக்கத்தில் உருவான இப்படத்தில் அர்ஜூன் சீதா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சந்திரபோஸ் இசையமைத்திருந்த இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சின்ன சின்ன பூவே’ பாடலை யேசுதாஸ் பாடியிருப்பார். சரத்பாபு தன் மகளுக்காக பாடும் வகையிலான இப்பாடலில் வைரமுத்துவின் வரிகள் இனிமை சேர்த்திருக்கும்.