June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

பிரிஜ் பூஷன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை; குற்றப் பத்திரிகையில் தகவல்

1 min read

No evidence against Brij Bhushan; Information in the Crime Journal

15.6.2023
பிரிஜ் பூஷன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் என்று குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளது. இதனால் அவர் மீது மைனர் மல்யுத்த வீராங்கனை கொடுத்த பாலியல் துன்புறுத்தல் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லி போலீஸார் நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 15) அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
மல்யுத்த வீரர்கள் புகார்

இந்திய மல்யுத்த வீரர்கள் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பிரிஷ் பூஷண் சரண் சிங் மீது டெல்லி காவல்துறை போக்சோ உள்ளிட்ட சில வழக்குகளைப் பதிவுசெய்தது. ஆனால், அவர் கைதுசெய்யப்படவில்லை. இதை எதிர்த்து மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மேலும், புதிய நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கையை பலமாக முன்வைக்க முயன்றபோது, டெல்லி காவல்துறையால் கைதுசெய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, பதக்கங்களை கங்கையாற்றில் வீசச் சென்ற வீரர்களை விவசாயிகள் தடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாகத் தெரிவித்தனர்.
இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீராங்கனைகளைச் சந்தித்துப் பேசினார். அப்போது ஜூன் 15-க்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.

குற்றப்பத்திரிகை

இந்த நிலையில், டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் இன்று டெல்லி காவல்துறை இந்த விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பிரிஜ் பூஷணுக்கு எதிராக 25 பேர் தங்கள் வாக்குமூலங்களைப் பதிவுசெய்திருக்கின்றனர். 180-க்கும் மேற்பட்டோர் இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்கப்பட்டனர். சமீபத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட ஒரு பெண்ணை விசாரணை நோக்கங்களுக்காக இந்திய மல்யுத்த கூட்டமைப்பு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தோம்.
அப்போது பிரிஜ் பூஷண் மீது பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டுகளை முன்வைத்த இரண்டு முக்கியப் பெண் மல்யுத்த வீராங்கனைகளிடம் ஆடியோ, வீடியோ, புகைப்படத்தை ஆதாரமாக அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், போதுமான ஆதாரம் கிடைக்கவில்லை. மேலும், பிரிஜ் பூஷணுக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த யாரும் டெல்லி காவல்துறையிடம் சாட்சியம் அளிக்கவில்லை. சிறுமியின் தந்தை தான் அளித்த பாலியல் வன்கொடுமைப் புகாரைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். எனவே, பிரிஜ் பூஷண் மீதான போக்சோ வழக்கை ரத்துசெய்ய வேண்டும். மல்யுத்த வீரர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவுசெய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரின்பேரில் விசாரணை முடிந்ததும், பிரிவுகள் 354 (பெண்ணைத் தாக்குதல்), 354-ஏ (பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கான தண்டனை) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறோம்.
மேலும், மல்யுத்த சம்மேளனத்தின் உதவி செயலாளர் வினோத் தோமர் மீதும், ஐ.பி.சி 354-D பின்தொடர்தல் (Stalking) மற்றும் பிரிவுகள் 109/ 354 /354 A/506 ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன/
இவ்வாறு குற்றப்பத்திரிகையி்ல் குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

போக்சோ வழக்கை ரத்துசெய்தது தொடர்பான விசாரணை ஜூலை 4-ம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு பிரிஜ் பூஷணின் டெல்லி இல்லத்துக்கு வெளியே பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.