ராமநாதபுரத்தில் போட்டியிட பிரதமர் மோடி தீவிர யோசனை
1 min read
Prime Minister Modi is serious about contesting in Ramanathapuram
18/6/2023
கடந்த 2014 மக்களவைத் தேர்தல் முதல் வீசத் தொடங்கிய மோடி அலையை, வட மாநிலங்கள் அளவுக்கு தென் இந்தியாவிலும் நிலைநாட்டுவது பாஜகவின் திட்டமாக உள்ளது. அதற்காக அவர் ராமநாதபுரத்தில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
பாராளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடக்க இருக்கிறது. இதில் மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர பாரதீய ஜனதா தீவிரம் காட்டி வருகிறது.
இந்த தேர்தலில் தமிழகத்தை குறிவைத்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுகிறது. உலகின் மூத்த மொழி தமிழ் எனக் கூறிய பிரதமர் மோடி, தமிழ் இலக்கியங்களின் முக்கியத்துவத்தை பறைசாற்றத் தொடங்கினார். புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் செங்கோல் வைக்கப்பட்டது.
மேலும் பிரதமர் மோடி மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட விரும்புகிறார். இந்த வருடம் ஜனவரியில் கிளம்பியப் புரளியை உண்மையாக்க பிரதமர் மோடி தீவிரமாகப் பரிசீலித்து வருகிறார்.
2014 மக்களவைத் தேர்தலில் உ.பி.யின், வாரணாசியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார் மோடி. 2019 மக்களவைத் தேர்தலில், வாரணாசியுடன் குஜராத்தின் வதோதராவிலும் போட்டியிட்டு இரண்டிலும் வென்றார். பின்னர் வதோதரா எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் 2024 மக்களவைத் தேர்தலில் வாரணாசியுடன் தமிழகத்தின் ராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிட பிரதமர் மோடி வியூகம் அமைப்பதாகத் தெரிகிறது. இதில், அவர் வென்றால் பாஜகவுக்கு பல மடங்கு நன்மை கிடைக்கும், தோல்வியுற்றால் பாஜகவின் அதேநிலை தொடரும். அதற்கேற்ப சமீபத்தில் தமிழகம் வந்த மத்திய அமைச்சர் அமித் ஷா, ‘‘அடுத்து தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் பிரதமராக வருவார்’ என கூறிச் சென்றுள்ளார்.
இது குறித்து பாஜக தேசிய நிர்வாகிகள் கூறும்போது, “ராமர் கோயில் திறப்புடன் நேரடித் தொடர்புடையதாக ராமேஸ்வரம் உள்ளது. ராமர் பாலமும் அருகிலிருப்பதால், பாஜக களம் அமைக்க ராமநாதபுரம் சிறந்த இடம். இங்கு பிரதமரே போட்டியிடுவதால் தமிழகத்தில் கூட்டணி இன்றி பாஜக தனியாகவே களம் இறங்கும். அதிமுக எத்தனை தொகுதிகளில் வென்றாலும் தேர்தலுக்கு பின் அதன் ஆதரவு எங்கள் அரசுக்கு இருக்கும். எனவே, பிரதமர் தாம் போட்டியிடுவது குறித்து தீவிரமாக யோசித்து வருகிறார்” என்றனர்.
வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி முடிந்தவுடன், பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட உள்ளதாக வதந்தி பரவியது. அதேபோல், தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும் என கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை திடீரென கருத்து கூறியிருந்தார்.
அ.தி.மு.க.
இந்நிலையில், பாஜகவுடன் சேர்ந்து போட்டியிட்டால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள் கிடைக்காது என நினைப்பதால் அதிமுக தனித்துப் போட்டியிடவும் திட்டமிடுகிறது. தற்போது, திமுக ஆட்சிக்கு எதிரான மனப்போக்கும் தமிழக வாக்காளர்களிடம் ஏற்படுவதாக ஒரு கருத்து உள்ளது.
இதனால், திமுகவிற்கு மக்களவை தேர்தலில் ஏற்படும் இழப்பு, அதிமுகவிற்கு சாதகமாகும் வாய்ப்புகள் உள்ளன. அதேசமயம், தமிழகத்தின் சில சிறிய கட்சிகளையும் தங்களுடன் சேர்ப்பதுடன், பாஜகவை கடுமையாக எதிர்த்தும் பேசினால்தான் அந்தப் பலன் அதிமுகவிற்கு கிடைக்கும்.
இதுபோல், பல்வேறு அரசியல் திருப்பங்கள் வரும் மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் நிகழ்ந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.