மணிப்பூர் கும்பல் மனதில் வெறியை உருவாக்கிய போலி வீடியோ
1 min read
Fake video created frenzy among Manipur gangs
22.7.2023
மணிப்பூரில் கலவரம் உருவான மே 3-ந் தேதி இரவு பரபரப்பாக சமூக வலைதளங்களில் ஒரு காட்சி பரவியது. உண்மையில் வீடியோ காட்சியில் இடம் பெற்றிருந்த பெண் டெல்லியை சேர்ந்தவர் ஆவார்.
மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் கலவரத்தில் பழங்குடியின பெண்கள் இருவர் ஆடைகள் இன்றி ஊர்வலமாக இழுத்து செல்லப்பட்ட கொடூர சம்பவத்தின் பின்னணியில் என்ன நடந்தது? என்பது பற்றி விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. குறிப்பாக குகி இன பெண்கள் மீதான பாலியல் கொடூரத்துக்கு ஒரு போலி வீடியோ காட்சி வதந்தியாக பரவியதுதான் காரணம் என்பதை போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.
பெண் கொலை
மணிப்பூரில் கலவரம் உருவான மே 3-ந் தேதி இரவு பரபரப்பாக சமூக வலைதளங்களில் ஒரு காட்சி பரவியது. அதில் ஒரு பெண் பிளாஸ்டிக் ஷீட்டில் சுற்றப்பட்டு கிடப்பது போன்று காட்சிகள் இடம் பெற்று இருந்தன.
அந்த காட்சிகளுக்கு கீழே மணிப்பூரில் மைதேயி இனத்தை சேர்ந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளார் என்ற வாசகங்கள் இடம் பெற்று இருந்தன. இது மணிப்பூரில் மே 3-ந் தேதி இரவு காட்டுத்தீ போல பரவியது.
அந்த வீடியோ காட்சியை கண்ட மைதேயி இன மக்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். தங்கள் இனத்தை சேர்ந்த ஒரு பெண்ணை குகி இனத்தவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து வீசி இருப்பதாக தவறாக புரிந்து கொண்டனர். உண்மையில் வீடியோ காட்சியில் இடம் பெற்றிருந்த பெண் டெல்லியை சேர்ந்தவர் ஆவார். டெல்லியில் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டு, பிளாஸ்டிக் ஷீட்டில் சுற்றி வீசப்பட்ட காட்சிதான் அதுவாகும்.
ஆனால் அதை சமூக விரோதிகள் யாரோ மணிப்பூரில் நடந்தது போன்று சித்தரித்து போலி வீடியோ தயாரித்து சமூக வலைதளங்களில் பரப்பி விட்டனர். அது மணிப்பூரில் எரிந்து கொண்டிருந்த கலவரத்தீயை மேலும் பற்றி எரிய வைத்துவிட்டது. தாங்கள் பார்ப்பது போலி வீடியோ காட்சிகள், தவறான தகவல் பரப்பப்படுகிறது என்பதை மைதேயி இன மக்கள் யாரும் தெரிந்து கொள்ளவில்லை. தங்கள் இன பெண் கொல்லப்பட்டது போன்று குகி இன பெண்ணை கொலை செய்ய வேண்டும் என்ற ஆக்ரோஷம் அவர்கள் மனதில் வெறியாக மாறி விட்டது. இவை அனைத்துக்கும் போலியான, தவறான தகவல்கள் வீடியோ காட்சிகளுடன் இடம்பெற்றதுதான் அடிப்படை காரணமாக அமைந்தது. குறிப்பிட்ட பகுதியை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் அந்த காட்சிகளை பார்த்ததால் மறுநாள் (மே 4-ந் தேதி) அருகில் உள்ள குகி இனத்தவர்கள் கிராமத்துக்குள் புகுந்து வெறியாட்டம் நடத்தி விட்டனர்.