குற்றாலம் கோவில் பழமையான பொருட்கள் கடத்தியதாக புகார்
1 min read
Smuggling of ancient items in Courtalam temple
1.7.2023
தென்காசி மாவட்டம் குற்றாலம் கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான பழைமையான பொருட்களை கடத்திச் சென்றதாக சிலை கடத்தல் பிரிவில் புகார் அளித்துள்ளார். இது குற்றாலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மண்டபங்கள்
குற்றாலம் அண்ணாசிலை ஆற்றுப் பாலம் பகுதி முதல் சன்னதி பஜார் மற்றும் செங்கோட்டை சாலை பிரிவு இடத்தில் உள்ள விநாயகர் கோவில் வரை சாலையின் இருபுறமும் பழங்கால மண்டபங்கள் சத்திரங்கள் உள்ளது.
இந்த மண்டபங்கள் சம்பந்தமாக குற்றாலநாதர் கோவில் நிர்வாகம் மற்றும் குற்றாலம் பேரூராட்சி நிர்வாகம் உரிமை கொண்டாடி வந்த நிலையில் இது தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவில் உதவி ஆணையரும், செயல் அலுவலருமான கண்ணதாசன் நெல்லை சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளருக்கு ஒரு புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பாத்திரங்கள்
தென்காசி மாவட்டம் குற்றாலம், திருக் குற்றாலநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமாக குற்றாலம் செங்கோட்டை சாலையில் பெரிய கல்மண்டபமும், அதைச் சார்ந்த இடங்களும் உண்டு. இதில் கல்மண்டபத்தில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட செம்பு, பித்தளை, வெண்கலம் ஆகியவற்றால் செய்யப்பட்ட விலை மதிப்புமிக்க பாத்திரங்கள் இருந்துள்ளது.
இந்த பழங்கால பொருட்களை குற்றாலம் பேரூராட்சி பணியாளர்கள் அந்த கல்மண்டபத்தில் இருந்து டிராக்டர் மூலம் கடத்தி சென்றுள்ளனர். இதுதொடர்பாக யூடியூப் மற்றும் வாட்ஸ்-அப் மூலம் தகவல் பரவி வருகிறது.
எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுத்து கோவிலுக்கு சொந்தமான பழங்கால விலை மதிப்புமிக்க பொருட்களை மீட்டுத்தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குற்றாலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது பற்றி குற்றாலம் பேரூராட்சி மன்ற தலைவர் எம்.கணேஷ் தாமோதரன் கூறியதாவது:-
குற்றாலம் மண்டபம் தொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்திற்கும் கோவில் நிர்வாகத்திற்கும் இடையே நீண்ட காலமாக வழக்கு நடைபெற்று வருகிறது. முன்பு அந்த சத்திரத்தில் பேரூராட்சி பணியாளர்கள் சில தங்கி இருந்தனர். தற்போது அங்கு பேரூராட்சி பணியாளர்கள் யாரும் இல்லை. சில தனிநபர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு உள்ள பித்தளை, செம்பு, பாத்திரங்களின் பாதுகாப்பு கருதி சுகாதார மேற்பார்வையாளர் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் நிர்வாக அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டு பொருட்கள் அனைத்தும் முறையாக கணக்கெடுக்கப்பட்டு பேரூராட்சிக்கு சொந்தமான லாரியில் ஏற்றப்பட்டு பேரூராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் மிகவும் பத்திரமாக வைக்கப் பட்டுள்ளது இவை அனைத்தும் வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்குத் தொடர்பாக பேரூராட்சி நிர்வாகம் மேல் முறையீடு செய்ய இருக்கிறது. எனவே பாத்திரங்களை கோவில் நிர்வாகத்திடம் தற்போது ஒப்படைக்கும் சூழல் இல்லை.
இந்நிலையில் குற்றாலம் கோவில் நிர்வாகம் இது தொடர்பாக குற்றாலம் பேரூராட்சி நிர்வாகத்திடம் தொலைபேசி வாயிலாகவோ அல்லது கடிதம் மூலமாக விளக்கம் கேட்டிருக்கலாம் கதவு பூட்டு உள்ளிட்டவை சரிவர இல்லாத நிலையில் தனி நபர்களிடமிருந்து பாதுகாத்து பத்திரப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அவை எடுத்துச் செல்லப்பட்டது,
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.