தோரணமலை கிரிவலத்தில் ஆதித்யா எல்-1 வெற்றியடைய பிரார்த்தனை
1 min read
Pray for success of Aditya L-1 in Thoranamalai Krivalam
31.8.2023
அகத்தியர், தேரையர் சித்தர் வழிபட்ட தோரணமலை ஸ்ரீ முருகன் கோவிலில் ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் கிரிவலத்தில் ஈடுபட்டனர். சந்திராயன் 3 வெற்றி பெற்றதை பாராட்டியும், ஆதித்யா எல்1 வெற்றி பெறவும் கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது.
பவுர்ணமி கிரிவலம்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ள பிரசித்திபெற்ற தோரணமலை முருகன் கோவில் அகத்தியர் மற்றும் தேரையர் சித்தர் வழிபட்ட பெருமையும் பழமையும் உடையதாகும். இந்த கோவிலில் மாதந்தோறும் வரும் பவுர்ணமி தினத்தில் தோரணமலையை சுற்றியுள்ள சுமார் ஆறரை கிலோமீட்டர் தூரத்திற்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
அதன்படி இன்று பவுர்ணமியை முன்னிட்டு இன்று அதிகாலை யிலேயே பக்தர்கள் யானை முக வடிவம் கொண்ட மலையை சுற்றியுள்ள கிரிவல பாதையில் வலம் வந்தனர்.
அதனை தொடர்ந்து மலை அடிவாரத்தில் உள்ள பிள்ளையார் கோவில் முன்பு சந்திராயன் 3 வெற்றி பெற்றதை பாராட்டியும், சூரியனுக்கு செல்ல இருக்கும் ஆதித்யா – எல்-1 விண்கலம் வெற்றி பெறவும், இந்தியா விண்வெளியிலும் விவசாயத்திலும், மாணவர்கள் அறிவியலிலும், ஆளுமையிலும் சாதனை புரிந்து உலகம் போற்றும் இடத்திற்கு வரவேண்டியும், மழை வேண்டியும் தோரணமலை பக்தர்கள் சார்பில் கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்றது.
இந்த கிரிவலம் மற்றும் கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தோரணமலை பரம்பரை அறங்காவலர் ஆ. செண்பக ராமன் செய்திருந்தார்.