June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

330 கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு 2-வது புத்தகம் வெளியிட்டார்

1 min read

Recovery of lands owned by 330 temples: Minister Shekharbabu released 2nd book

8.9.2023
சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட கோவில்களின் சொத்துகள் விவரம் அடங்கிய 2-வது புத்தகத்தை வெளியிட்டார். அப்போது நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற 07.05.2021 முதல் 31.03.2022 வரை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 167 கோவில்களின் ரூ.2,566.94 கோடி மதிப்பிலான சொத்துகள் குறித்த விவரங்களை தொகுத்து, வெளிப்படைத்தன்மையுடன் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் முதல் புத்தகம் 17.05.2022 அன்று வெளியிட்டோம்.

அதனை தொடர்ந்து, 01.04.2022 முதல் 31.03.2023 வரையிலான காலத்தில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட கோவில் சொத்துகளின் விவரம், தனிநபர் பெயரிலும், கணினி சிட்டாவிலும் தவறுதலாக பதிவான பட்டா மாறுதல்களை சரிசெய்து கோவில்கள் பெயரில் மீண்டும் பட்டா மாறுதல் செய்யப்பட்ட விவரம் ஆகியவற்றை உள்ளடக்கிய 2-வது புத்தகத்தை இன்று வெளியிட்டு இருக்கிறோம். இப்புத்தகத்தில் 01.4.2022 முதல் 31.3.2023 வரையிலான காலத்தில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 330 கோவில்களுக்குச் சொந்தமான ரூ.1,692.29 கோடி மதிப்பிலான 3386.06 ஏக்கர் நிலம், மனை, கட்டிடம் மற்றும் திருக்குளம் விவரங்கள், நிலவுடைமை பதிவு மேம்பாட்டு திட்ட நடவடிக்கையின் போது தனிநபர் பெயரில் தவறுதலாக பட்டா மாற்றம் செய்யப்பட்ட நிலத்திற்கு மீண்டும் பட்டா பெற்ற 145 கோவில்களுக்குச் சொந்தமான 801.63 ஏக்கர் நிலங்களின் விவரம், கணினி சிட்டாவில் பதிவான தவறுகளை சரிசெய்து 180 கோவில்களுக்கு சொந்தமான 1,434.43 ஏக்கர் நிலங்களுக்கு கோவில் பெயரில் பட்டா பெற்ற விவரம், நவீன தொழில்நுட்ப கருவியான டி.ஜி.பி.எஸ். மூலம் 74514.48 ஏக்கர் கோவில் நிலங்களில் அளவீடு செய்யப்பட்டுள்ள விவரம், அவற்றின் புகைப்படங்கள், அதுகுறித்து நாளிதழ்களில் வெளிவந்த செய்திகள் அனைத்தும் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. இந்நூல்கள் எதிர்காலத்தில் கோவில்களின் சொத்துகளை பாதுகாக்க அடிப்படை ஆதாரமாக விளங்கும்.

கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுக்கும் பணிகளும், தனிநபர் பெயரிலும், கணினி சிட்டாவிலும் தவறுதலாக பதிவான பட்டா மாறுதல்களை சரிசெய்து கோவில்கள் பெயரில் மீண்டும் பட்டா மாறுதல் செய்யும் பணிகளும் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஒட்டுமொத்தமாக, கடந்த 07.05.2021 முதல் 07.09.2023 வரை 653 கோவில்களுக்கு சொந்தமான ரூ.5,171 கோடி மதிப்பீட்டிலான 5,721.19 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு உள்ளதோடு, நவீன தொழில்நுட்ப கருவியான டி.ஜி.பி.எஸ். ரோவர் மூலம் 1,48,956.20 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்து பாதுகாக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது முதன்மைச் செயலர் டாக்டர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன், ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் சங்கர், ந.திருமகள், ஹரிப் ரியா, தனி அலுவலர்கள் விஜயா, ஜானகி, குமரேசன் உடன் இருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *