அமெரிக்க ஆப்பிள்களுக்கு இறக்குமதி வரி குறைப்புக்கு பிரியங்கா காந்தி கண்டனம்
1 min read
Priyanka Gandhi condemns cut in import duty on US apples
13.9.2023
அமெரிக்க ஆப்பிள்களுக்கு இறக்குமதி வரி குறைப்புக்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
வரிகுறைப்பு
அமெரிக்க ஆப்பிள்கள், அக்ரூட் பருப்புகள் மற்றும் பாதாம் மீதான கூடுதல் வரிகளை நீக்குவது குறித்து மத்திய அரசு ஒரு அறிக்கை வெளியிட்டது. அதன்படி, அமெரிக்க ஆப்பிள்களுக்கு இறக்குமதி வரியை 35 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறுகையில், அமெரிக்க ஆப்பிள்களுக்கு இறக்குமதி வரி குறைக்கப்படும்போது கொள்முதல் விலையும் குறையும். இதனால் இமாச்சலபிரதேசம், சிம்லாவில் உள்ள ஆப்பிள்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இங்கு ஆப்பிள் விவசாயிகள் கஷ்டப்படும்போது அரசு யாருக்கு உதவ வேண்டும்? என கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூடுதல் வரிகளை நீக்குவதால் ஆப்பிள், வால்நட் மற்றும் பாதாம் உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. மாறாக இந்த தயாரிப்புகளின் பிரீமியம் சந்தை பிரிவில் நியாயமான போட்டி ஏற்படும். அதன் மூலம் போட்டி தன்மையில் சிறந்த தரத்தை உறுதி செய்யும் என கூறப்பட்டு உள்ளது.