“நீட் தேர்வில் ‘பூஜ்யம்’ எடுத்தால் படிக்க முடியுமா? சரியான புரிதல் இல்லை” என மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி
1 min read
“Can you study if you score ‘zero’ in NEET? No proper understanding” Tamilisai reply to M.K.Stalin
21.9.2023
நீட் தேர்வால் பூஜ்யம்தான் பலன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறி இருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மருத்துவ முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வில் “பூஜ்யம்” மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் அவர்களுக்கு கல்லூரியில் சேர இடம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதை போல தவறாக விமர்சிப்பவர்களுக்கு நீட் தேர்வு கட் ஆப் மதிப்பெண், பூஜ்ஜியம் பர்சன்டைல் என்றால் என்ன? என்பதை பற்றிய புரிதல் முதலில் அறிந்து கொள்ளவும்.
நீட் தேர்வை பற்றிய புரிதல் இன்றி நீட் தேர்வை ஒழிப்பதாக கூறிக்கொண்டிருப்பவர்களுக்கு இதைப் பற்றிய புரிதல் இல்லாதது ஒன்றும் ஆச்சரியமல்ல?
நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு மருத்துவம் மேற்படிப்பு படிக்க இடம் கிடைக்காது என்பது நிதர்சனமான உண்மை. நீட் தேர்வில் வெற்றி பெற குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்தால் மட்டுமே மருத்துவ மேற்படிப்பில் சேரலாம்.
இந்தியாவில் நீட் தேர்வு எழுதி வெற்றி பெறுபவர்கள் அனைவருக்குமே மருத்துவ மேற்படிப்பு படிக்க இடம் கிடைப்பதில்லை. மருத்துவ மேற்படிப்பில் நீட் தேர்வில் உச்சபட்ச மதிப்பெண்கள் பெற்றவர்கள் மருத்துவ மேற்படிப்பு படிக்க முன்னுரிமை. அத்தகைய இடங்கள் முழுமையாக நிரம்பிய பின்னர் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு கட்ஆப் மதிப்பெண்கள் பெற முடியாத மாணவர்கள் பயன்பெறும் வகையில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் காலியாக உள்ள இடங்களை பயன்படுத்திக் கொள்ளும் இந்த முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இதன் புரிதல் மிக அவசியம். நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு நிச்சயம் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காது. குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கே இந்த முறை. இதை விமர்சிப்பவர்களுக்கு இதைப் பற்றிய புரிதல் மிக அவசியம்.
இதைப்பற்றி புரிதல் இல்லாமல் மக்களையும், மாணவர்களையும் குழப்பி மாணவச் செல்வங்களிடம் தவறான எண்ணங்களை கொண்டு சேர்க்கின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
==
மோடியின் வாரணாசி தொகுதியில் ரூ.450 கோடியில் கிரிக்கெட் ஸ்டேடியம்
வாரணாசி,செப்.22-
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி ஆன்மீக சிறப்பு பெற்றது.
பிரதமர் மோடியின் தொகுதியான இங்கு மற்றொரு சிறப்பு அம்சமாக பிரமாண்டமான கிரிக்கெட் மைதானம் உருவாக உள்ளது. வாரணாசியில் உள்ள கஞ்சாரி பகுதியில் ரூ.450 கோடி செலவில் கட்டப்படும் இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு வருகிற 23-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். கிட்டத்தட்ட 31 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் இந்த மைதானம் 30 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் கட்டப்பட உள்ளது. டிஸ்ப்ளே ஸ்கோர்போர்டு, பிளட் லைட்கள், கார்ப்பரேட் பாக்ஸ்கள், பயிற்சிப் பகுதிகள், வி.ஐ.பி. ஓய்வறைகள், செய்தியாளர் சந்திப்பு மண்டலம் மற்றும் அலுவலகப் பகுதிகள் என்று அனைத்து வசதிகளுடன் கூடியதாக இந்த மைதானம் அமைய உள்ளது.
இந்த மைதானம் குறித்து உத்தரபிரதேச கிரிக்கெட் சங்க இயக்குநர் யுத்வீர் சிங் கூறுகையில், வருகிற 2025-ம் ஆண்டு முதல் காசி மக்கள் இந்த மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளை பார்க்கலாம் என்றார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உத்தர பிரதேச கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றின் தீவிர பங்கேற்புடன் இந்த மைதானம் அமைய உள்ளது. அடிக்கல் நாட்டு விழாவில் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கவாஸ்கர், கபில்தேவ், தெண்டுல்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள். மேலும், நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த மாநில அரசு ரூ.120 கோடி வரையில் செலவு செய்துள்ளது. இந்த மைதானம் சிவனின் தலையில் சூடியிருக்கும் பிறை போலவும், நுழைவு பகுதி உடுக்கை போன்றும், மின் விளக்கு கம்பங்கள் சூலாயுதம் போலவும் அமைக்கப்பட உள்ளன.