மழையால் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து: குண்டாறு அணை 2-வது முறையாக நிரம்பியது
1 min read
Continued inflow to dams due to rains: Kundaru dam filled for 2nd time
25.9.2023
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கும் மேலாக மாலை நேரங்களில் பரவலாக பெய்த மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 69.55 அடியாக இருந்தது. இன்று மேலும் 1 அடி உயர்ந்து 70.90 அடியானது. தொடர்ந்து அணைக்கு வினாடிக்கு 1,164 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 83.85 அடியாகவும், மணிமுத்தாறு அணையில் 45.25 அடியாகவும் உள்ளது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மழை இல்லை. மாஞ்சோலை வனப்பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் விவசாய பணிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வரும் குண்டாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது. 36 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் மூலம் சுமார் 1,200 ஏக்கர் பாசன பரப்பளவில் ஆண்டுக்கு முப்போக சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. குண்டாற்றை நம்பி சுமார் 950 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையின்போதும் முதலில் முழு கொள்ளளவை எட்டும் அணையாக குண்டாறு அணை இருந்து வருகிறது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவகாலத்தின்போது ஒரு முறை அணை நிரம்பிய நிலையில் அதன்பின்னர் மழை பொய்த்து போனதால் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இந்நிலையில் சில நாட்களாக பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 2-வது முறையாக நேற்று மாலை நிரம்பி வழிந்தது. இதனால் பிசான சாகுபடிக்கான நீர்வரத்து உறுதியான நிலையில் இந்த அணையை நம்பி உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் தஞ்சாவூர் குளம், செங்கோட்டை பகுதி குளங்கள், நல்லூர், பிரானூர், தென்கால்வாய், மெட்டு, மூன்று வாய்க்கால், பிரானூர், கொட்டாகுளம் பகுதி விவசாயிகள் அதிகளவில் பயனடைவார்கள். கடந்த ஜூலை மாதம் 7-ந்தேதி அணை நிரம்பியபோது வெளியேறிய உபரிநீர் கிட்டத்தட்ட 28 நாட்கள் வரை வழிந்தோடியது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 22 மில்லி மீட்டரும், குலசேகரபட்டினத்தில் 8 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது.