கடையம் பஸ் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு
1 min read
Death toll rises to 9 in bus overturn accident on mountain road
1.10.2023
கடையத்தில் இருந்து சுற்றுலா சென்ற பஸ் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விபத்து பற்றிய உருக்கமான தகவல்கள் வருமாறு:-
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்த 59 பேர் கேரளா, நீலகிரி, கோவை மருதமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.
அதன்படி, கடந்த 28-ந் தேதி கடையத்தில் இருந்து 59 பேரும் சுற்றுலா பஸ்சில் சுற்றுலாவுக்கு புறப்பட்டனர். டிரைவர்கள் 2 பேருடன் சேர்த்து மொத்தம் 61 பேர் இந்த பஸ்சில் பயணித்தனர்.
முதலில் இவர்கள் கேரள மாநிலம் சோட்டானிக்கரை, குருவாயூர் பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்தனர். பின்னர் நேற்று அதிகாலை, கேரளா வழியாக நீலகிரி மாவட்டத்திற்குள் வந்தனர்.
இங்குள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் சுற்றி பார்த்தனர். பின்னர் மருதமலை செல்ல திட்டமிட்டு கோவை செல்வதற்காக பஸ்சில் புறப்பட்டனர்.
மாலை 5.30 மணி அளவில் பஸ் மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில், குன்னூர் மரப்பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பை இடித்து கொண்டு அங்கிருந்த 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் பஸ்சில் இருந்த முப்புடாதி (67), முருகேசன்(63 ), இளங்கோ(64 ), தேவிகா(42), கவுசல்யா( 29), நிதின்(15), ஜெயா(50), தங்கம்(40) ஆகிய 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர்.
மற்றவர்கள் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டு அபயகுரல் எழுப்பினர். இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
செல்லம்மா என்ற மூதாட்டி உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தொடர்ந்து வேறு யாராவது பஸ்சில் சிக்கி இருக்கிறார்களா என்பதை அறிய இன்று காலையும் மீட்பு பணி தொடர்ந்தது.
அப்போது பஸ்சின் அடிப்பகுதியில் இருந்து பெண் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். அவரது பெயர் பத்மராணி (57) என்பது தெரியவந்தது. அவரது உடலையும் மீட்டுபிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதனால் விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.
தொடர்ந்து பள்ளத்தில் சிக்கிய பஸ்சை வெளியே கொண்டு வரும் பணியை தொடங்கி உள்ளனர். கிரேன் உதவியுடன் பஸ்சை மீட்கும் பணி நடந்தது.
சுற்றுலா பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து, 9 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் நீலகிரிக்கு விரைந்து வந்துள்ளனர். அவர்கள் இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர்(வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை) பிரபாகர், கலெக்டர் அருணா, டி.ஐ.ஜி.சரவணசுந்தர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். மேலும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதலும் கூறினர். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தனர்.
பஸ்சில் சரியாக பிரேக் பிடிக்காததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த பஸ் சரியாக பராமரிக்கப்பட்டு உள்ளதா, அதற்கான சான்றுகள் உள்ளதா என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு 9 பேரின் உடலும் தனிதனி ஆம்புலன்சில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த ஆம்புலன்சில் இறந்தவர்களின் உறவினர்களும் வந்தனர்.
உயிர்தப்பியகர்கள் தனி மினி பஸ் ஒன்றில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அன்பழகன் உறவினர்கள்
இந்த சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் அன்பழகன். இநத விபத்தில் இவரது மனைவி பத்மராணியும் இறந்துவிட்டாார். இவரது சித்தப்பா மகன் இளங்கோவும் இறந்துள்ளார். அன்பழகனின் உறவினர்கள் மட்டும் மொத்தம் 7 பேர் இறந்துள்ளனர்.