நெல்லை, தென்காசியை உணர்திறன் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க ரவி அருணன் கோரிக்கை
1 min read
Ravi Arunan’s request to declare Nella, Tenkasi as a sensitive conservation zone
5.10.2023
கனிம வளங்களை பாதுகாக்க நெல்லை, தென்காசி மாவட்டங்களை உணர்திறன் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தென்காசி, அம்பை சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
கனிம வளம்
கனிம வளங்களை நமக்காக மட்டுமல்லாமல் நமது வருங்கால சந்ததி யினருக்காகவும் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்திலும், அவசியத்திலும் இருக்கிறோம்.
கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி யுள்ள பல பகுதிகளை உணர்திறன் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து அங்கிருந்து கனிம வளங்கள் எடுப்பதற்கு தடை செய்யும் விதத்தில் அங்குள்ள குவாரிகளை மூடிவிட்டு அவர்களது தேவைகளை பூர்த்தி செய்ய தமிழகத்தில் இருந்து அதி கனரக வாகனங்களில் அளவுக்கு அதிகமாக கனிமவளங்ள் கொண்டு செல்கின்றனர்.
தமிழகத்திலும் அதே போல் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களை உணர்திறன் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து தமிழகத்தின் வளத்தை பாதுக்காக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரில் இது குறித்த ஒரு சட்ட முன்வடிவை தாக்கல் செய்து மாநில கனிம வளங்களை நமது தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வழி செய்வதுடன் பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கு நிரந்தரமாக தடை விதிப்பதற்கும் சட்டம் இயற்ற வேண்டும்.
எனவே வருகிற 9-ந் தேதி தொடங்கும் சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்றி தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களை உணர்திறன் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.