மதுபோதையில் சிகிச்சை; கடையம் பல் ஆஸ்பத்திரிக்கு சீல்
1 min read
Treatment of alcoholism; Seal for the last dental hospital
7.10.2023
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் உள்ள ஒரு பல் மருத்துவர் மதுபோதையில் சிகிச்சை அளித்ததாக சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் அதிகாரிகள் அந்த பல் மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்.
போதையில் சிகிச்சை…
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் மருத்துவர் தங்கராஜ் என்பவர் தனியார் பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரிடம் பல் பிடுங்குவதற்காக கீழக்கடையம் பகுதியைச் சேர்ந்த செல்வன் என்பவர் சென்றுள்ளார். அப்போது அந்த மருத்துவர் தங்கராஜ் மது போதையில் சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வன் அந்த மருத்துவர் தங்கராஜிடம் மது அருந்திவிட்டு சிகிச்சை அளிக்கலாமா? என்று கேட்டுள்ளார். அப்போது அந்த இளைஞரிடம் அந்த மருத்துவர் மது அருந்தியதை ஒப்புக் கொண்டுள்ளார் அது ஒன்றும் பிரச்சனை இல்லை ஐந்து நிமிடத்தில் சிகிச்சையை முடித்து விடலாம் என்று கூறி சிகிச்சை பார்ப்பதிலேயே குறியாக இருந்து உள்ளார்.
இதை அவருடன் வந்த மற்றொருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை அறிந்த தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா, மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா, மாவட்ட தேசிய ஊர சுகாதாரக் குழும ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், அறிவுடைநம்பி, வட்டார மருத்துவ அலுவலர் பழனிக்குமார், மேற்பார்வையாளர் ஆனந்தன், தலைமையிலான வருவாய் மற்றும் சுகாதார துறையினர் கடையத்தில் செயல்பட்டு வந்த தங்கராஜின் பல் மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். அதனை தொடர்ந்து மருத்துவர் தங்கராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.