கேரள ஜெயிலில் சுயசரிதை எழுதிய பிரபல கொள்ளையன்
1 min read
Famous robber who wrote autobiography in Kerala Jail
12.10.2023
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருவங்காடு பகுதியை சேர்ந்தவர் சித்திக். சிறுவயதிலேயே திருட்டு சம்பவங்களில் ஈடுபட தொடங்கிய இவர், தற்போது வரை 500-க்கும் மேற்பட்ட கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது 219 திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் கடந்த 34 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
இனியாவது கொள்ளையில் ஈடுபடாமல் திருந்தி குடும்ப வாழ்க்கை வாழ முடிவு செய்திருக்கும் அவர், கண்ணூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த மாத இறுதியில் ஜெயிலில் இருந்து விடுதலையாகிறார். தனது வாழ்வின் பெரும் பகுதியை சிறையிலேயே கழித்துள்ள அவர், தன்னை பற்றி சுயசரிதை எழுதியிருக்கிறார். கள்ளந்தோ ஆத்மகதா (ஒரு திருடனின் சுயசரிதை) என்ற தலைப்பில் எழுதியிருக்கும் சுயசரிதையில் தனது திருட்டு வாழ்க்கை மற்றும் சிறை வாழ்க்கை பற்றி அனைத்தையும் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
சித்திக் தனது 14 வயது வயதில் தனது சகோதரியின் மகனின் தங்க மோதிரத்தை திருடி தனது முதல் திருட்டை தொடங்கியிருக்கிறார். பின்பு ரேசன்கடையில் தனது மாமாவின் பணத்தை திருடியது, தாயின் தங்க செயினை திருடியது என்று அடுத்தடுத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு கைதாகி சிறை தண்டனையை அனுபவித்து வந்திருக்கிறார்.
1989-ம் ஆண்டு கண்ணூர் மத்திய சிறையில் இருந்தபோது, சிறைத்தோழர் ஒருவரிடம் பூட்டு உடைக்கும் கலையை கற்றுக்கொண்டு, பின்பு சிறையை விட்டு வெளியே வந்ததும் பூட்டியிருக்கும் வீடுகளில் கொள்ளையடிக்க தொடங்கினார். கொள்ளையடித்த பணத்தை சில நேரங்களில் அனாதை இல்லங்களுக்கும் கொடுத்திருக்கிறார். இதுபோன்ற தனது வாழ்வில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் தனது சுயசரிதையில் சித்திக் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது.