சென்னையில் நாளை திட்டமிட்டப்படி ஆசிரியர்கள் போராட்டம்: 10 ஆயிரம் பேர் பங்கேற்பதாக அறிவிப்பு
1 min read
Teachers strike as planned in Chennai tomorrow: 10 thousand people announced to participate
12.10.2023
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிடல், எமிஸ் பதிவேற்றம் பணிகளில் இருந்து விடுவித்தல் என்பன உட்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோ ஜாக்) சார்பில் சென்னையில் நாளை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து டிட்டோ ஜாக் குழுவில் உள்ள ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் ஆகியோர் சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்படாததால் திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்த உள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து தமிழக ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் வின்சென்ட் பால்ராஜ் கூறியதாவது:-
நாங்கள் முன்வைத்த 30-ல் 9 கோரிக்கைகளை நிறைவேற்ற கல்வித்துறை அதிகாரிகள் முன்வந்தனர். ஆனால், அதற்கு எழுத்துப் பூர்வமாக உத்தரவாதம் வழங்க வலியுறுத்தி உள்ளோம்.
அதையேற்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அறிக்கை வெளியிட வேண்டும். இல்லையெனில் திட்டமிட்டபடி சென்னையில் டி.பி.ஐ. வளாகத்தில் நாளை போராட்டம் நடத்தப்படும்.
இதில் 10 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். தற்செயல் விடுப்பு அளித்து விட்டு போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். மேலும், எமிஸ் தளத்தில் வருகைப்பதிவு தவிர்த்து இதர அலுவல் பணிகளை வருகிற 16-ந் தேதி முதல் ஆசிரியர்கள் மேற்கொள்ள மாட்டார்கள்” என்றார். இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட உள்ள ஆசிரியர் சங்கங்களுடன் இன்று காலை 8 மணியளவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை நடத்துகிறார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் அமைச்சரிடமிருந்து பேச்சுவார்த்தைக்கு முறையான அழைப்பு இல்லாத காரணத்தால் ஆசிரியர்கள் சங்கம் பேச்சுவார்த்தையை புறக்கணித்தது.