தென்காசி மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது – பைக் பறிமுதல்
1 min read
3 Lottery Ticket Sellers Arrested in Tenkasi District – Bike seized
27.10.2023
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சொக்கம்பட்டி பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த மூன்று நபர்களை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
சங்கரன்கோவில் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சார்பு ஆய்வாளர் சுரேஷ் கண்ணன் ரோந்து பணியில் இருந்த போது அங்கு சட்டவிரோதமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வது தெரிய வந்தது.
அதன்படி சங்கரன்கோவில் அருகே உள்ள சங்குபுரம் நான்காவது தெருவை சேர்ந்த விநாயகம் என்பவரின் மகன் மாரியப்பன் (வயது 60) மற்றும் வேல்முருகன் காம்பவுண்ட் அருகே லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட பாரதியார் எட்டாவது தெருவை சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மகன் மாரியப்பன் (வயது 49) ஆகியோர் மீது வழக்கு பதிவு கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 43200 மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் சொக்கம்பட்டி தண்ணீர் பந்தல் ஓடை அருகே லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட திரிகூடபுரம் பசும்பொன் தேவர் தெருவை சேர்ந்த தவசி என்பவர் மகன் கருத்தப்பாண்டி (வயது 48) மீது சார்பு ஆய்வாளர் திரு. உடையார் சாமி வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 9250 மதிப்பிலான 162 லாட்டரி சீட்டுகள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.