அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு
1 min readSupreme Court refuses to grant bail to Minister Senthil Balaji
28.11.2023
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்க மறுத்தது. இதனைத் தொடர்ந்து, மருத்துவ காரணங்களை சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். உயர்நீதிமன்றத்திலும் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், மருத்துவ காரணங்கள் அடிப்படையில் ஜாமின் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் இன்று அவரது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டபோது, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
செந்தில் பாலாஜி உடல்நிலை அறிக்கையின்படி, ஜாமினில் வந்தால் மட்டுமே பார்த்துக் கொள்ள முடியும் என்று அவரது உடல்நிலையில் தெரியவில்லை என்று தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதி திரிவேதி தனது தீர்ப்பில்” செந்தில் பாலாஜியின் மூளை பாதிப்பு குறித்து கூகுளில் தேடிப்பார்த்தேன். மருந்து எடுத்துக் கொண்டார், அது சரி செய்யக்கூடியதுதான். இன்று பைபாஸ் சிகிச்சையெல்லாம், அப்பென்டிக்ஸ் ஆபரேசன் போல சாதாரணமாகிவிட்டது. எனவே, மருத்துவ காரணங்களுக்காக செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.