பவூர்சத்திரம் அருகே மயானத்தில் கோழிகளை பலியிட்டு பூஜை- போலீஸ் விசாரணை
1 min read
Pooja after midnight sacrifice of chickens in graveyard near Bhaurchatram- Police investigation
4.12.2023
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே மயானத்தில் நள்ளிரவில் 3 கோழிகளின் தலைகளை வெட்டி படையலிட்டு பூஜை செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பூபாலசமுத்திரம் கிராமத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் அவர்களுக்கு என தனி பொது மயானம் ஊருக்கு தென்புறத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று காலையில் மயானம் அருகே உள்ள தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் மயானத்தில் மிகப்பெரிய படையல் போட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இரவில் மயானத்தில் புகுந்த மர்ம நபர்கள் 3மண் கலயங்கள் மீது தேங்காய் வைத்து செந்நிற ஆடைகளை சுற்றி மாலை அணிவித்து வாழை இலைகளை விரித்து தேங்காய், வாழைப்பழம்,ஆப்பிள், ஆரஞ்சு என பல்வேறு பழங்களைக் கொண்டும் தனியாக தயார் செய்யப்பட்ட படையல் சாப்பாடுகளை படைத்தும் தடியங்காய்களை இரண்டாக வெட்டி அதன் மீது குங்குமத்தை தடவி மூன்று சேவல்களின் தலைகளை வெட்டியும் பலி கொடுத்து மிகப்பெரிய மயான பூஜைகளை நடத்தியுள்ளனர்.
வழக்கமாக கோவிலுக்கு பலியிடும் கோழிகளை அவர்களே எடுத்துச் சென்று விடுவார்கள் ஆனால் இந்த மயானத்தில் பலியிடப்பட்ட கோழிகளின் உடல்களை அப்படியே போட்டு சென்றதால் அதனை நாய்கள் தூக்கிச் சென்றன.
இதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் இந்த தகவல் ஊர் முழுவதும் பரவிய நிலையில் பொதுமக்கள் பெரும் பீதி அடைந்தனர்
இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு ஊர் பொதுமக்கள் தகவல் தெரிவித்ததன் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்
அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். இருப்பினும் இரவில் மயானத்தில் கோழிகளின் தலைகளை வெட்டி மயான பூஜைகள் ஈடுபட்ட நபர்கள் எதன் அடிப்படையில் நடத்தினார்கள் என்றும் சிறப்பு சக்தியினை பெறுவதற்கு பூஜையினை நடத்தினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா?
இதனால் ஊரில் ஏதாவது விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து விடுமோ ? என்று பூபாலசமுத்திரம் பகுதி பொதுமக்கள் மத்தியில் இந்த சம்பவம் மிகப்பெரிய குழப்பத்தையும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.