காசி தமிழ்சங்கம் 2.0 விழா: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
1 min readKashi Tamil Sangam 2.0 Ceremony: Inaugurated by PM Modi
17.12.2023
இரண்டாவது ஆண்டாக இன்று (17 ம் தேதி ) இசை நிகழ்ச்சியுடன் துவங்கிய காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.
இன்று துவங்கி உள்ள நிகழ்ச்சி வரும் 30ம் தேதி வரை நடைபெற உள்ளன.
உத்தரபிரதேசத்தின் வாரணாசிக்கும், தமிழகத்துக்கும் இடையே உள்ள வரலாற்று, கலாசார இணைப்புகளை வெளிப்படுத்தும், இரண்டாவது காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிகள் இன்று துவங்கின. வாரணாசியில் துவங்கிய நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
உத்தர பிரதேசத்தின் காசி, பனாரஸ் என்றழைக்கப்படும் வாரணாசிக்கும், தமிழகத்துக்கும் இடையே நீண்ட வரலாற்று, கலாசார பிணைப்பு உள்ளது. இதை வெளிப்படுத்தும் வகையில், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி கடந்தாண்டு நடத்தப்பட்டது.இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, நாடு முழுதும் பல்வேறு நகரங்களுக்கு இடையேயான பிணைப்புகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.
இசை நிகழ்ச்சியுடன் துவங்கிய விழாவில் பிரதமர் மோடி உ.பி., மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
பேச்சு
காசி தமிழ்சங்கம் 2.0 விழாவில் பேசிய பிரதமர் மோடி இன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இங்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது. இது ஒரு புதிய துவக்கமாகும். மேலும் இது உங்களை சென்றடைவதில் எளிதாக்குகிறது என்று நம்புகிறேன் என கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, “காசி தமிழ்சங்கம் 2.0 விழாவில் கலந்து கொண்டுள்ள நீங்கள் அனைவரும் விருந்தினராக இருப்பதை விட எனது குடும்ப உறுப்பினர்களாக இங்கு வந்துள்ளீர்கள். காசி தமிழ் சங்கமத்திற்கு வந்துள்ள உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்” என்றார்.
தொடர்ந்து விழாவிற்காக விடப்பட்டு உள்ள சிறப்பு ரயில்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
மேலும் பிரதமரின் உரை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் பார்வையாளர்களுக்கு தமிழ் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது.
தொடர்ந்து அவர் பேசியபோது, “உலகின் பிறநாடுகள் அரசியலை இலக்கணமாக கொண்டுள்ளது. ஆனால் இந்தியா, ஆன்மிக நம்பிக்கைகளால் ஆனது. சங்கராச்சாரியார், இராமானுஜர் போன்ற ஆன்மிக பெரியோர்கள் நாடு முழுவதும் பயணம் செய்ததால் இந்தியா ஒன்றுபட்டுள்ளது. புதிய பார்லிமென்ட் கட்டிடத்தில் ஆதின துறவிகளின் அறிவுறுத்தல்படி செங்கோல் நிறுவப்பட்டது. இந்த செங்கோல் 1947 ல் அதிகார பரிமாற்றத்தின் அடையாளமாக மாறியது.” என்றார்.