பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி: டி.ஆர்.பாலு உள்பட 33 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்
1 min readOpposition in Parliament: 33 MPs including DR Balu suspended
18.12.2023
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 4-ந்தேதி தொடங்குகியது. வருகிற 22-ந்தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறுகிறது.
இதற்கிடையே பாராளுமன்ற பாதுகாப்பில் மிகப் பெரிய குளறுபடி ஏற்பட்டது. 2 வாலிபர்கள் அத்து மீறி நுழைந்து வண்ணப் புகையை உமிழும் குப்பிகளை வீசியதால் பெரும் பதற்றமும், பீதியும் ஏற்பட்டது.
பாராளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பாக பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா விளக்கம் அளிக்க வலியுறுத்தி பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்கட்சியினர் கடந்த 14-ந்தேதி அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து 14 எம்.பி.க்கள் எஞ்சிய கூட்டத் தொடர் முழுவதும் ‘சஸ் பெண்டு’ செய்யப்பட்டனர்.
பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக அமித்ஷா விளக்கம் அளிக்க கோரியும், 14 எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்டை திரும்ப பெற வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் 2 நாட்கள் அவை அலுவல்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
பாராளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு கூடியது. சபை கூடியதும் குவைத் மன்னர் ஷேக் நவாஸ் அல் ஜாபர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட் டது. அதைத்தொடர்ந்து பாராளுமன்ற அத்துமீறல் தொடர்பான பிரச்சினையை எதிர்க்கட்சியினர் கிளப்பினர். சபையின் மைய பகுதிக்கு எதிர்கட்சி எம்.பி.க்கள் வந்து அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினார்கள்.
எதிர்க்கட்சி எம்.பி.க் களில் சிலர் கைகளில் பதா கைகளை வைத்து இருந்தனர். சபைக்குள் பதாகைகள் கொண்டு வந்ததற்கு சபா நாயகர் ஓம் பிர்லா எதிர்ப்பு தெரிவித்தார். சபையின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் இருப்பதாக அவர் கூறினார்.
சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய மந்திரி பிரகலாத் ஜோதி ஆகியோரின் வேண்டுகோளை நிராகரித்து அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
அமளியால் அவைத்தலைவர் சபையை 12 மணி வரை ஒத்தி வைத்தார்.
மேல்சபையிலும் பாதுகாப்பு அத்துமீறல் பிரச்சினையை காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கிளப்பினார்கள். மத்திய மந்திரி அமித்ஷா விளக்கம் அளிக்கக்கோரி அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். சில உறுப்பினர்கள் கைகளில் பதாகைகள் வைத்து இருந்தனர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளியால் அவை 2 முறை ஒத்தி வைக்கப்பட்டது.
முதலில் 11.30 மணி வரை அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் ஒத்திவைத்தார். சபை கூடியதும் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பிற்பகல் 2 மணி வரை 2-வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டது.
இதன்பின்பு அவை கூடியபோது, தலைவர் ராஜேந்திர அகர்வால் தலைமையில் மதியம் அவை நடந்தபோது, மீண்டும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர் என கூறியும், அவையின் கண்ணியம் மற்றும் மதிப்பு ஆகியவற்றை காக்கும் வகையில் 33 எம்.பி.க்களை சபாநாயகர் சஸ்பெண்டு செய்து அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார்.
இதன்படி, தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, ஆ. ராசா, தயாநிதி மாறன், சுமதி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். உறுப்பினர்கள் நவாஸ்கனி, அண்ணாதுரை, கலாநிதி வீராசாமி, எஸ்.எஸ். பழனி மாணிக்கம் உள்ளிட்டோரும் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.
காங்கிரஸ் எம்.பி.க்களான விஜய் வசந்த், திருநாவுக்கரசர், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கவுரவ் கோகாய் உள்ளிட்டோரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். சில நாட்களுக்கு முன் தி.மு.க. எம்.பி.க்கள் உள்பட 14 பேர் மக்களவையில் சஸ்பெண்டான நிலையில், அதிகளவிலான உறுப்பினர்கள் நேற்று சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.