தென்காசி மாவட்டத்தில் பேரிடர் மீட்பு பணியில் காவல்துறையினர் தீவிரம்
1 min read
Police are active in disaster relief work in Tenkasi district
19-12.2023
தென்காசி மாவட்டத்தில் கனமழை பெய்த நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக துறையினர் செயல்பட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள் ளார்.
அதன் பேரில் தென்காசி காவல்நிலைய ஆய்வாளர் கே.எஸ்.பாலமுருகன் தலைமையில போலீசார் கீழ வாலிபன் பொத்தை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட 15 நபர்களை காவல் துறையினர் மீட்டு தென்காசி மஞ்சம்மாள் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காலை உணவு வசதி போன்றவற்றை காவல்துறையினர் ஏற்பாடு செய்து வழங்கினர்.
தென்காசி கீழவாலிபன் பொத்தையில் ஆதரவற்ற நிலையில் 80 வயது பெண் தனியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று ஆதரவற்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த 80 வயது மதிக்கத்தக்க பெண்ணை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சங்கரன்கோவில் பிரதான சாலைகளில் தொடர் மழையின் காரணமாக ஏற்பட்ட பள்ளத் தினை காவல் துறையினர் விபத்துகள் ஏற்படா வண்ணம் மண் மற்றும் கற்களை கொண்டு சீரமைத்தனர்.
திருவேங்கடம் சத்திரப்பட்டி ஆற்றுப்பாலத்தில் தொடர் மழையின் காரணமாக வெள்ளத்தில் அடித்து வந்த கழிவுகள் அனைத்தும் பாலத்தின் மீது கிடந்ததால் போக்குவரத்து தடைபட்டது.
உடனடியாக ஜேசிபி வாகனம் மூலம் கழிவுகளை அப்புறப்படுத்தி காவல் துறையினர் போக்குவரத்தினை சீர் செய்தனர்.
திருவேங்கடம் அருகே நிட்சோப நதி கரையோர பகுதியில் தங்கியிருந்த மக்களை காவல் துறையினர் மீட்டு அப்பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் அழைத்து வரப்பட்டு தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு வசதி போன்றவற்றை ஏற்பாடு செய்து வழங்கினர்.
செங்கோட்டையிலிருந்து மதுரை செல்லும் சாலையில் சுப்பிரமணியபுரம் அருகே தொடர் மழையின் காரணமாக பழமையான ஆலமரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் செங்கோட்டை காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து உடனடியாக சாலையில் விழுந்த மரத்தினை அப்புறப்படுத்தி போக்கு வரத்தை சரி செய்தனர்.