தூத்துக்குடியில் இன்னும் நிவாரணப்பொருட்கள் கிடைக்கவில்லை என புகார்
1 min read![](https://www.seithisaral.in/wp-content/uploads/2023/12/தூத்துக்குடி-வெள்ளப்பாதிப்பு.jpg)
Complaints that relief materials are not yet available in Tuticorin
21.12.2023
திருநெல்வேலி: திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி மழை வெள்ளநீர் சூழ்ந்த கிராமங்களில் இன்னும் மீட்புப் பணி முழுமையாக நடக்கவில்லை. துாத்துக்குடியில் ஏராளமானோர் பரிதவிப்பில் உள்ளனர்.
திருநெல்வேலி, துாத்துக்குடியில் கடந்த 17-ந் தேதி பெய்த பலத்த மழையால் இரண்டு மாவட்டங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
நெல்லையில் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் குறைந்துள்ளது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. டவுன் ரத வீதிகளில் கடைகள் வழக்கம் போல செயல்பட்டன.
திருநெல்வேலி டவுன் காட்சி மண்டபம், ஜங்ஷன் கைலாசபுரம் பகுதியில் நிவாரண பொருட்கள் கிடைக்கவில்லை என கூறி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
துாத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி கரையோரம் உள்ள கிராமங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஸ்ரீவைகுண்டம் அருகே காடுவெட்டி, பேரூர், பெருங்குளம், சிவராமங்கலம் உள்ளிட்ட கிராமங்கள் இன்னும் நீரில் மூழ்கியுள்ளன.
அங்கு மீட்பு பணி இன்னும் போய் சேரவில்லை. ஆழ்வார்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. தாமிரபரணி கடலில் சேரும் புன்னக்காயல், ஆத்துார், காயல்பட்டினம் மற்றும் திருச்செந்துார் உள்ளிட்ட பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. யாரும் அங்கிருந்து வரவோ, உள்ளே செல்லவோ முடியவில்லை
இந்நிலையில், திருச்செந்துார் சாலையில், ஸ்ரீவைகுண்டம் அருகே பொன்னங்குறிச்சியில் அந்த ஊர் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிவாரணம் வழங்க கேட்டு அவர்கள் நடத்திய போராட்டத்தால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
துாத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.
துாத்துக்குடி பிரையன்ட்நகர், அண்ணா நகர், கோரம்பள்ளம் உள்ளிட்ட பகுதிகள் மழை நீரில் தத்தளிக்கின்றன. அங்கு மீட்பு பணிகள் முழுமையாக நடக்கவில்லை. டி.எம்.பி., காலனி பகுதியில் மீட்பு பணியை பார்வையிட சென்ற கனிமொழி எம்.பி.,யை மக்கள் முற்றுகையிட்டனர்.