பொன்முடிக்கு விடுதலைபெற்று கொடுப்போம்- தி.மு.க. வக்கீல்பேட்டி
1 min readWe will give freedom to Ponmudi- DMK Advocacy interview
21.12.2023
திமுக சார்பில் விரைவில் மேல்முறையீடு செய்து பொன்முடியை விடுவிப்போம் என அவரது வழக்கறிஞரும், திமுக எம்.பியுமான என். ஆர். இளங்கோ நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பாக, ஒரு மாதம் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நாங்கள் உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். அந்த மேல்முறையீட்டில் பொன்முடிக்கு நிச்சயம் விடுதலை பெற்று கொடுப்போம்.
பொன்முடியின் மனைவி ஒழுங்காக வருமான வரி செலுத்தவில்லை என்ற ஒரே காரணத்தால் ரூ. 1.75 கோடி லாபத்தை கணக்கில் கொண்டு பொன்முடி மீது அதிமுக ஆட்சியில் பழிவாங்கும் நோக்கத்தோடு வழக்கு போடப்பட்டது. கீழமை நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.
பொன்முடியின் மனைவி இருசக்கர வாகன விநியோகஸ்தராக வெற்றிகரமாக தனது தொழிலை செய்து வருகிறார். குறித்த நேரத்தில் வருமான வரி செலுத்தாததால் சந்தேகம் எழுந்துள்ளதாக தான் நீதிமன்றம் கூறியுள்ளது. பொன்முடி மனைவிக்கு வருடத்திற்கு ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் இருந்தது என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளோம். தீர்ப்பால் திமுகவுக்கு எந்த நெருக்கடியும் இல்லை.மேல்முறையீட்டின் விசாரணையில் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டால் பொன்முடிக்கு மீண்டும் எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சர் பதவி கிடைக்கும்.
சட்டத்தில் ‛லேடன்ட் பயாஸ்’ என்பார்கள். அதாவது ஒரு சார்புடையவர். ஆனால் எங்களை பொறுத்தவரை நீதிபதி ஜெயச்சந்திரன் அப்பழுக்கற்றவர், எந்த சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டவர். ஆனால், அதிமுக ஆட்சியில் இருந்தபோது அவர் சட்டத்துறை செயலாளராக இருந்துள்ளார்.
அப்போது இந்த வழக்கில் சொத்துகளை முடக்கம் செய்வது குறித்தான கோப்புகளை கையாண்டுள்ளார். இது நேற்றைக்கு தான் பொன்முடிக்கு தெரியவந்துள்ளது. இதனை நீதிபதியிடம் எடுத்துக்கூறினோம். அதற்கு நீதிபதி, ‛நீங்கள் அப்போதே சொல்லியிருந்தாலும் இந்த வழக்கில் இருந்து விலகியிருக்க மாட்டேன்’ என்றார். இது முழுக்க முழுக்க சட்டம் சார்ந்த பிரச்னை. அதனை நிச்சயம் உச்சநீதிமன்றத்தில் எடுத்து செல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.