பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை-எடப்பாடி பழனிசாமி பேச்சு
1 min read
There is no alliance with BJP in the parliamentary elections – Edappadi Palaniswami’s speech
26.12.2023
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு நடைபெற்றது. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தலைமையேற்ற பின் நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.
அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் வியூகம், தேர்தல் கூட்டணி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
- அ.தி.மு.க. ஆட்சியில் பல புயல்கள் வந்தன; புயல் வேகத்தில் செயல்பட்டு, புயலின் அடிச்சுவடே இல்லாமல் பணி செய்தோம்.
- திருவண்ணாமலையில் அறவழியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை தி.மு.க. அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்தது. இதற்கு விவசாயிகள் தகுந்த பதிலடி தருவார்கள்.
- ஊழல் செய்தததில் தான் சாதனை செய்தனர். வேறு என்ன சாதனை செய்தனர்? சரியான முறையில் கொரோனா பரவலை தடுக்க முடியாமல் திணறியது தி.மு.க.
- 520 வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்பட்டதா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கட்சி நடத்தவும் தெரியவில்லை. ஆட்சி நடத்தவும் தெரியவில்லை.
- மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி எப்போது வரும் என மக்கள் கேட்கத் தொடங்கிவிட்டனர். அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறும் என்ற எண்ணம் மக்களிடம் வந்துவிட்டது.
- மத்திய அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது. மத்திய அரசின் நிதிக்காக காத்திருக்காமல் மாநில அரசின் நிதி மூலம் மக்களை காப்பாற்றியது அ.தி.மு.க. அரசு. மாநில அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுத்ததாக வரலாறு இல்லை.
- மத்தியில் காங்கிரஸ் ஆண்டாலும் பா.ஜ.க. ஆண்டாலும் மாற்றாந்தாய் மனப்பான்மையோடுதான் தமிழ்நாட்டை பார்க்கிறது.
- நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.