June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

ஜெயலலிதாவுக்கு ரூ.2 கோடி கடன் கொடுத்தேன்-ஓ.பன்னீர் செல்வம் பேட்டி

1 min read

I gave a loan of Rs 2 crore to Jayalalithaa- O. Panneer Selvam interview

26.12.2023
பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று முதல் அடுத்த மாதம் 24-ந் தேதி வரை ஒரு மாதம் காலம் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி ஓ.பன்னீர்செல்வம் தனது சுற்றுப்பயணத்தை கொங்குமண்டலமான கோவை மாவட்டம் சூலூரில் தொடங்கினார்.

சூலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

உன்னைத்தான் தம்பி நான் நம்பியிருக்கிறேன் என்று எம்.ஜி.ஆரும் அம்மா அவர்களும் தாய்பாச உணர்வோடு ஒன்றரை கோடி தொண்டர்களையும் தான் பெற்ற பிள்ளைகள் என்று பாவித்து தான் வளர்த்தார்கள். இல்லையென்றால் சாதாரண தொண்டனாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், நகர் மன்ற தலைவர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சராக வந்திருக்க முடியுமா?
அதிமுகவின் சரித்திரத்தில் 12 ஆண்டுகள் கழகத்தின் பொருளாளராக இருந்தவன் நான் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அந்த பொறுப்பை என்னிடம் அம்மா தரும்போது 2 கோடி ரூபாய் பற்றாக்குறை இருந்தது. இரண்டே வருடத்தில் அது 4 கோடியாக ஆயிற்று.

அம்மா அவர்கள் ஒருநாள் என்னை அழைத்து, பன்னீர்செல்வம் தனிப்பட்ட முறையில் எனக்கு நிதி பற்றாக்குறை இருக்கிறது. வழக்குகள் எல்லாம் என்மேல் போட்டு இருக்கார்கள். நான் அவர்களுக்கு எல்லாம் வங்கிகள் மூலம் பணம் தரவேண்டும். 2கோடி ரூபாய் கழக நிதி எனக்கு தர கேட்டார். உடனே நான் ஒரு வருடத்தில் திருப்பி தந்துவிடுகிறேன் என்றார்.
உடனே 2 கோடி ரூபாய் கொடுத்தேன். ஒரே மாதத்தில் அம்மாவும் அந்த 2 கோடி ரூபாய் கொடுத்தார். இதுதான் வரலாறு.

இன்றைக்கு எங்களை எல்லாம் வெளியேற்றி விட்டு வன்முறை மூலமாக 228 பேரை கூட்டி பொதுக்குழுவை கூட்டியிருக்கிறார்கள். இந்த 228 பேரை வைத்து கழகத்தை அபகரிப்பு செய்து மீண்டும் நாலரை வருடம் முதலமைச்சராக இருந்த ருசி அவரை விடவில்லை. திரும்ப வந்து நாட்டையே சூறையாடி கொள்ளையடித்து செல்ல வேண்டும் என்பது தான் அந்த கூட்டம் இன்றைக்கும் பொதுக்குழுவை நடத்திக் கொண்டு இருக்கிறது என்பதுதான் நிதர்சமான உண்மை.
இவ்வாறு அவர் கூறினார்.

சூலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இதன்பின்னர் ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

ஜன.19-ந்தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதில் தான் பொதுக்குழு தீர்மானம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு முடிவுக்கு வரும்.

கட்சியில் இருந்து என்னை நீக்கியதற்கான காரணம் என்ன? நான் என்ன குற்றம் செய்தேன் சொல்ல முடியுமா? யாருக்கு நம்பிக்கை துரோகம் செய்தேன். சொல்லமுடியுமா? யார் பதவி தந்தாலும் அவர்களுக்கு திருப்பி தந்துவிட்டு அம்மாவின் விசுவாச தொண்டனாக இப்போது வரைக்கும் இருந்து கொண்டு இருக்கிறேன்.

தி.மு.க.வுடன் நான் கூட்டு என சொல்பவர்கள் முட்டாள்கள். சட்டமன்ற விதிகளில் எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பு மட்டும் தான் உள்ளது.
சிறப்பான ஆட்சி செய்யும் மோடியே பிரதமராக தொடர வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.
சில விஷயங்களை நான் கூறினால் எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்கு சென்று விடுவார். அவை அரசாங்க ரகசியம் என்பதால் அமைதியாக விட்டு விட்டேன்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *