ஜல்லிக்கட்டு: தமிழக அரசின் சட்டம் செல்லும் என்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி மனு
1 min read
Jallikattu: Petition seeking review of the Tamil Nadu government’s decision to pass the law
8.1.2024
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடுகள் துன்புறுத்தப்படுவதாக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. மேலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன.
இதனால் தமிழக அரசு விலங்குகள் கொடுமைப்படுத்துதலை தடுக்கும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து சட்டசபையில் சட்டம் நிறைவேற்றியது. பின்னர், ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்தார். இதனால் சட்டமானது.
இதன் காரணமாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த இருந்த தடை நீங்கியது. இருந்த போதிலும் பீட்டா போன்ற அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் இந்த சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் சட்டம் நிறைவேற்றப்பட்டது செல்லும். ஜல்லிக்கட்டை நடத்த தடையில்லை என ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.
தற்போது பொங்கல் பண்டிகையொட்டி அலங்காநல்லூர், அவனியாபுரம் உள்ளிட்ட பிரபலமான இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மூத்த வழக்கிறஞர் அபிஷேக் சிங்வி, உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தமிழக அரசு நிறைவேற்றிய சட்டம் செல்லும் என ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வு வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை பட்டிலியடுவது குறித்து பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை பட்டியலிட முடிவு செய்யப்பட்டால், பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் தேதி அறிவிக்கப்படும்.
மகாராஷ்டிரா மாநில அரசு, கர்நாடகா மாநில அரசு ஆகியவையும் முறையே தங்களது மாநிலங்களிலம் நடைபெறும் மாட்டு வண்டி பந்தயம், கம்பாலா போட்டிக்காக சட்டம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.