புளியங்குடியில் ஆக்கிரமிப்பு ரூ.5 கோடி அரசு நிலம் மீட்பு
1 min readRs 5 crore government land recovery in Buliangudi
10/1/024
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜ் மற்றும் அவரது உறவினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசுக்கு சொந்தமான ரூபாய் 5 கோடி மதிப்பிலான நிலத்தை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவுபடி அதிகாரிகள் மீட்டனர்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம் புளியங்குடி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட புளியங்குடி கிராமம் பழைய புல எண் 351/2 விஸ்தீரணம் ஹெக்டேர் 1.05.0 ஏர்ஸ் (ஏக்கர் 2 செண்டு 60) சர்க்கார் புறம்போக்கு மயானம் என உள்ள நிலமானது தற்பொழுது நகரளவையில் வார்டு எப் பிளாக் 9 டவுண் சர்வே எண் 16/2 என உள்ளது.
மேற்படி நிலமானது புளியங்குடி நகராட்சியின் முன்னாள் ஆணையாளர் பவுன்ராஜின் தாயார் மம்மது மற்றும் அவரது உறவினர் பெரிய சாமி என்பவரின் மகன் இசக்கி ராஜன் ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்து அந்த இடத்தில் செங்கல்சூளை நடத்தி வந்தனர். இந்த இடத்தின் தற்கால சந்தை மதிப்பு சுமார் 5 கோடி என்று தெரிகிறது.
அரசுக்கு சொந்தமான ரூபாய் 5 கோடி மதிப்பிலான நிலத்தினை முன்னாள் நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜ் மற்றும் அவரது உறவினர் செய்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பல்வேறு புகார்கள் வந்தது.
இந்நிலையில் ஆக்கிரமிப்பு செய்தது தொடர்பாக புளியங்குடி நகராட்சி அலுவலகம் மூலம் அந்த ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பான நடவடிக்கையில் இருந்து வந்த நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை இரவிச்சந்திரன் உத்தரவின்படி தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா முன்னிலையில் கடையநல்லூர் வருவாய் வட்டாட்சியர், புளியங்குடி நகராட்சி சுகந்தி , புளியங்குடி துணைக்காவல் கண்காணிப்பாளர், புளியங்குடி காவல் ஆய்வாளர், கடையநல்லூர் காவல் ஆய்வாளர், தலைமை நில அளவர், மண்டலத்துணை வட்டாட்சியர் கடையநல்லூர், புளியங்குடி நகரமைப்பு ஆய்வாளர், நகரநில அளவர், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் மற்றும் காவலர்கள் உதவியுடன் ஆக்கிரமிப்பு தொடர்பான நிலத்தை அளவீடு செய்து அந்த இடத்தை மீட்டெடுத்து கம்பிவேலி யிடப்பட்டு அரசு புறம்போக்கு இடம் பாதுகாக்கப்பட்டது.
புளியங்குடி நகராட்சியில் முன்னாள் நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜ் மற்றும் அவரது உறவினர் அரசுக்கு சொந்தமான ரூபாய் 5 கோடி மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து செங்கல் சூளை நடத்தி வந்த நிலையில் தமிழக அரசு அந்த ஆக்கிரமிப்பு அகற்ற முடிவு செய்து அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டு அரசு நிலத்தை மீட்டெடுத்த தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு புளியங்குடி பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.