தென் மாநிலங்களில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகியது – வானிலை ஆய்வு மையம் தகவல்
1 min read
North East Monsoon has withdrawn from southern states – Meteorological Department Information
14/1/2024
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து வளிமண்டல சுழற்சியின் காரணமாக நெல்லை, துாத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து பெரும் சேதங்கள் ஏற்பட்டன.
இந்த நிலையில் தென் மாநிலங்களில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கடலோர ஆந்திரா பகுதிகளில் இருந்து, கடந்த அக்டோபர் 21-ந்தேதி துவங்கிய வடகிழக்கு பருவமழை விலகியது. தென் தமிழக பகுதிகளில் வரும் 18, 19, 20 ஆகிய தினங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை அதிகாலை லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. இந்திய பெருங்கடல், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.