மத்தியில் ஆட்சி மாற்றம் தேவை- கீழப்பாவூர் பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேச்சு
1 min read
Change of government is needed at the center – Kanimozhi MP in Geezhapavoor assembly. Speech
27.1.2024
மாநில அரசுகளின் உரிமையையும், பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த மத்தியில் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக தேவை என கீழப்பாவூர் பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசினார்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கீழப்பாவூரில் நடைபெற்றது. மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் ஜெ.கே.ரமேஷ் தலைமை வகித்தார். கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன், மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமகாலிங்கம், மாவட்ட துணைச்செயலாளர்கள் தமிழ்செல்வன், கென்னடி, வழக்கறிஞர் க.கனிமொழி, பொருளாளர் ஷெரீப், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மா.செல்லத்துரை, எஸ்.கே. முத்துப்பாண்டி, சேக்தாவூது, வீகே.புதூர் ஜேசுராஜன், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் செங்கோட்டை எஸ்.எம்.ரஹீம், ஏ.பி.அருள், ராஜேஸ்வரன், சமுத்திரபாண்டி, கதிர்வேல் முருகன்,கோ.சாமித்துரை, தமிழ்செல்வி, ரவிச்சந்திரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ் செல்விபோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.எல்.சிவன்பாண்டியன் அனைவரையும் வரவேற்று பேசினார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இலத்தூர் பூ.ஆறுமுகச்சாமி தொகுப்புரை ஆற்றினார்.
இக்கூட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். முன்னதாக தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் தலைமையில், தென்காசி தெற்கு மாவட்ட பகுதிகளில் கன மழையால் பாதிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்டோருக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மொழிப்போர் தியாகிகள் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 கொடிக் கம்பங்களில் மகளிர் அணி நிர்வாகிகளுடன் இணைந்து கொடியேற்றி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:- இந்திமொழி திணிப்பால் தமிழக மக்களின் அடையாளம், பண்பாடு மட்டுமல்ல, ஒவ்வொரு மாநிலங்களின் அடையாளமும் மறைக்கப்படும். மாணவர்களின் கல்வி,வேலை வாய்ப்பு பாதிக்கப்படும். ஒவ்வொருவரும் அவர்களுக்கு விருப்பமான எந்த மொழியையும் கற்கலாம். ஹிந்தி திணிப்பை மட்டுமே திமுக எதிர்கிறது. அயோத்தியில் கோவில் பணிகள் முடியும் முன்பே தேர்தலுக்காக அவசர அவசரமாக திறக்கப்பட்டுள்ளது. கோவில்களில் பூஜை நடத்தக்கூடாது என தமிழக அரசு கூறியதாக பொய் பிரச்சாரத்தை பாஜக அரசு செய்கிறது. திராவிட ஆட்சியில் தான் அதிகமான கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. அனைத்து மதத்திற்குமான அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி மாநில முதல்வராக இருந்த போது மாநில உரிமைக்காக பேசியவர். தற்போது பிரதமரானவுடன், மாநில அரசுகளின் உரிமையை பறிக்க நினைக்கிறார்.
குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களுக்கு அதிகமான நிதியை தரும் பாஜக அரசு ஜிஎஸ்டி வரியை அதிகமாக கொடுக்கும் தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை கூட தரவில்லை. குறிப்பாக டிசம்பர் மாதத்தில் சென்னை மற்றும் தென் தமிழகத்தில் ஏற்பட்ட கடும் மழை வெள்ள பாதிப்பிற்கு எந்த விதமான நிதியையும் தரவில்லை.
தமிழகத்தில் அதிகமானோருக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வீர தீர செயல்கள் பற்றி நமது தமிழர்கள் அறிந்ததோடு மட்டுமல்லாமல்,அவரது படையில் சேர்ந்து பணியாற்றியுள்ளார்கள். உலகிற்கே அகிம்சையை எடுத்துக் கூறி அகிம்சை வழியில் போராட்டம் நடத்தி இந்தியாவுக்கு சுதந்திரத்தை பெற்று தந்த மகாத்மா காந்தியை இழிவுபடுத்தும் விதமாக கவர்னர் ஆர்.என். ரவி பேசிவருகிறார்.அதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தனது கடும் கண்டனத்தை பதிவு செய்கிறது .பாஜக அரசு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தமிழக ஏழை தொழிலாளிக்கு வழங்க வேண்டிய 367 கோடி நிதியை இதுவரை வழங்காமல் பாக்கி வைத்துள்ளது. இதனால் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு சென்று குடும்பத்தை நடத்தும் ஏழைப் பெண்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
மாநில அரசுகளின் உரிமையையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த மத்தியில் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக தேவை. அதற்கு அடித்தளமாக தமிழகத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தொகுதியிலும் வெற்றி பெற்று மத்தியில் கூட்டாட்சி தத்துவத்தை நிலைநிறுத்த வேண்டும்.அப்பொழுதுதான் மாநிலங்களின் உரிமை பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக கீழப்பாவூர் வருகை தந்த கனிமொழி எம்.பி.க்கு சிவகாமிபுரம் விலக்கில் திமுக மாவட்ட பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.