ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நிர்வகிக்க ஏற்படுத்தப்பட்ட அறக்கட்டளை சட்டம் ரத்து
1 min read
The Trust Act set up to manage Jayalalithaa’s Boise Garden home was repealed
14.2.2024
2020-ம் ஆண்டு தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை சட்டம் காலாவதியாகி விட்டதால் இச்சட்டத்தை நீக்குவதற்கான சட்ட மசோதா சட்டசபையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.
செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் இதனை தாக்கல் செய்தார். அந்த மசோதாவில் கூறியிருப்பதாவது:-
சென்னை போயஸ் தோட்டப் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வசித்த இடமான வேதா நிலையத்தை ஒரு நினைவு இல்லமாக மாற்றி அமைக்கப்பதற்கும், பராமரிப்பதற்கும் அதனை மேலாண்மை செய்வதற்குமான நீண்ட கால ஏற்பாடுகளாக ஒரு அறக்கட்டளை நிறுவுவதற்காக சட்டம் இயற்றப்பட்டது.
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு 2021-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் இந்த நடவடிக்கைகளை ரத்து செய்து ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுதாரர்களுக்கு வேதா நிலையத்தின் சாவியை ஒப்படைக்க உத்தரவிட்டு இருந்தது. அதன்படி ஜெயலலிதா வீட்டின் சாவி வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் 2021-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் நோக்கம் தற்போது செயல்பாட்டில் இல்லாத நிலையில் அச்சட்டம் காலாவதியாகி விட்டதால் சட்டத்தை நீக்க அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த சட்டம் பேரவையின் இறுதி நாள் அன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.