சபாநாயகர் வழங்கிய தேநீர் விருந்தில் கனிமொழி எம்.பி. பங்கேற்பு- காங். புறக்கணிப்பு
1 min read
MP Kanimozhi attends tea reception hosted by the Speaker; Congress boycotts.
13.8.2026
நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஓம் பிர்லா வழங்கிய தேநீர் விருந்தில் திமுக சார்பில் கனிமொழி எம்.பி. பங்கேற்றார். இந்தியா கூட்டணி புறக்கணித்த நிலையில் திமுக மட்டும் பங்கேற்றுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்து நீட் தேர்வு முறைகேடு விவகாரம், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் நடத்திய நடவடிக்கை, ராமர் கோவில் நன்கொடை பணம் திருட்டு குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன.
இதனால் எதிர்க்கட்சிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நீடித்தது. இருப்பினும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளிக்கு இடையே முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்றும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.
இதனால், மக்களவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. அமளி தொடர்ந்து நீடித்ததால், மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா. அதனை தொடர்ந்து மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது. இவ்வாறு 20-ம் தேதி தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்ததையடுத்து, அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கும் வழக்கம்போல் சபாநாயகர் ஓம் பிர்லா தேநீர் விருந்து அளித்தார். இந்த தேநீர் விருந்தில் பங்கேற்க அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. சபாநாயகரின் தேநீர் விருந்தை காங்கிரஸ், சமாஜவாதி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் புறக்கணித்துள்ளனர்.
ஆனால், தேநீர் விருந்தில் திமுக சார்பில் கனிமொழி எம்.பி. பங்கேற்றார். பாஜகவுடன் திமுக நெருக்கம் காட்டி வருவதாகவும், தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மசோதாக்களை திமுக உதவியுடன் பாஜக நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தவெக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், தேநீர் விருந்தில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பையும் விவாதத்தையும் எற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி. கனிமொழி கூறுகையில், “ காங்கிரஸிடம் இருந்து மட்டுமே விலகி இருக்கிறோம்; இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறோம்” எனக் கூறினார்.