28 -ந் தேதி பிரதமர் மோடி நெல்லை வருகை
1 min read
Prime Minister Modi visit Nellie on 28
பிரதமர் மோடி வரும் 28.02.2024 அன்று தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு தென்காசி மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தென்காசியில் உள்ள மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட பாஜக தலைவர் கே.ஏ.ராஜேஷ் ராஜா தலைமை தாங்கினார்.
தென்காசி மாவட்ட பாஜக பொதுச் செயலாளர்கள்
பாலகுருநாதன் ராமநாதன் அருள்செல்வன் முன்னிலை வகித்தனர். தென்காசி
மாவட்ட பாஜக பொருளாளர் பாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்த கூட்டத்தில் தென்காசி மாவட்ட பாஜக தலைவர் கே.ஏ.ராஜேஷ் ராஜா பேசியதாவது:-
பாராளுமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் அதன்படி வரும் 28ஆம் தேதி பாரதப் பிரதமர் மோடி திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
அதன்படி வரும் 28.02.2024 அன்று காலை 8 40 மணிக்கு மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் உள்ள ஹெலிபேட் தளத்திற்கு காலை 09.30 மணிக்கு வருகை தருகிறார்.
அதனைத் தொடர்ந்து குலசேகரபட்டினத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்திற்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டுகிறார். மேலும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றுகிறார்.
அதன்பின் காலை 10:35 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக புறப்பட்டு காலை. 11.10 மணிக்கு பிரதமர் மோடி திருநெல்வேலி வருகிறார்.
நெல்லை – பாளையங் கோட்டை ஜான்ஸ் பள்ளியில் உள்ள ஹெலிபேட் தளத்திற்கு வரும் பிரதமர் மோடி அங்கிருந்து கார் மூலம் அருகில் உள்ள பெல் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாஜக பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றுகிறார்.
பாரதப் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரமாண்ட பொதுக்கூட்டம் மற்றும் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில்
தென்காசி மாவட்டத்தில் உள்ள 24 மண்டலங்களில் இருந்தும் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள், மற்றும் ஆதரவாளர்களையும் அதிகப்படியான எண்ணிக்கையில் பங்கேற்கும் வகையில் ஏராளமான வாகனங்களில் அழைத்து செல்ல அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக
மாநில தொழில் பிரிவு செயலாளர் மகாதேவன், மாவட்ட துணை தலைவர்கள்
முத்துக்குமார், பாலமுருகன், பாஜக மண்டல் தலைவர்கள் மாவட்ட அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தென்காசி நகர பாஜக தலைவர் மந்திர மூர்த்தி அனைவருக்கும் நன்றி கூறினார்.