கனம வளம் ஏற்றிய கனரக வாகனங்களை தடைசெய்ய கோரிக்கை
1 min readDemand to ban heavy vehicles loaded with heavy goods
27.2.2024
தென்காசி, பிப். 27-
தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு அதிகளவில் கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப் படுவதால் மாவட்ட பொதுமக்கள் அச்சத்துடனேயே சாலையில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. எனவே கனம வளம் ஏற்றிய – கனரக வாகனங்களை தடைசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் இருந்து நாள் தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் மூலம் கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் இம்மாவட்டத்தில் எதிர்காலத்தில் கனிம வளங்கள் இல்லாமல் போய்விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமாக கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, வருவாய்த்துறை, கனிம வளத்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
கனரக வாகனங்கள் சாலைகளில் செல்வதால் தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரதான சாலைகள் விரைவில் பழுதாகி விடுகின்றன. மேலும் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய குடிநீர் குழாய்கள் சாலையோரம் பதிக்கப்பட்டிருப்பதால் கனரக வாகனங்கள் செல்லும் போது குடிநீர் குழாய்கள் உடைந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது.
மேலும் கனிமவளங்களை எற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் தொடர்ச்சியாக, ரயில்; பெட்டிகள் செல்வது போல் செல்வதால் இதர வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்படுவதோடு, கனரக வாகனங்களால் பொதுமக்களுக்கு விபத்து ஏற்பட்டு வருவது வாடிக்கையாகி விட்டது. இதனால் சாலைகளில் பொதுமக்கள் பயணிக்;கும் போது மிகுந்த அச்சத்துடனேயே செல்லும் நிலை உள்ளது.
இன்று காலையில் புளியரை செக்போஸ்ட் அருகில் கேரளாவிற்கு கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் கனரக வாகனம் பைக்கில் மோதி பைக்கில் சென்றவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்கவும், கனரக வாகனங்கள் கேரளாவிற்கு இரவு பகம் என்று பாராமல் 24 மணி நேரமும் கொண்டு செல்லப்படுவதை தடுக்கவும் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்கோரிக்கை நிறைவேற்றப்படா விட்டால் வரும் பாராளுமன்ற தேர்தலின் போது தங்களின் எதிர்ப்பை மிகப் பெரிய அளவில் தெரிவிக்க சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது அரசியல் கட்சிகள் மத்தியில் குறிப்பாக ஆளும் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.