கீழப்புலியூரில் ரூ 40 லட்சம் செலவில் மதிப்பு கூட்டு மையம் திறப்பு
1 min readInauguration of value added center in Keezhapuliyur at a cost of Rs 40 lakhs
27.2.2024
தென்காசி மாவட்டம் கீழப்புலியூரில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை சார்பில் தமிழ்நாடு நீர் பாசன மேலாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் ரூபாய் 40 லட்சம் செலவில்
மதிப்பு கூட்டு மையம் திறப்பு விழா நடைபெற்றது.
சிற்றாறு வடிகால் பாசன பகுதிக்கு உட்பட்ட விவசாயிகளை ஒன்று சேர்த்து சிற்றாறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டு அந்த நிறுவனத்தில் 700 விவசாயிகள் பங்குதாரர்களாக உள்ளனர்.
இந்த நிலையில், இந்த விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு இடைத்தரகர்கள் இல்லாமல் நியாயமான விலை கிடைக்கும் வகையில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களிலிருந்து வேறு பொருள்களை தயாரித்து மதிப்பு கூட்டு பொருளாக விற்பனை செய்யும் வகையில் தமிழ்நாடு நீர் பாசன வேளாண்மை நவீனமாக்கல் திட்டம் மூலம் கீழப்பாவூர் பகுதியில் வேளாண்மை மதிப்பு கூட்டு மையம் தொடங்கப்பட்டது.
உலக வங்கி நிதி மற்றும் தமிழக அரசின் ரூ.30 லட்சம் மானியத்துடன் சேர்த்து ரூ.40 லட்சம் மதிப்பில் தொடங்கப்பட்ட இந்த வேளாண் மதிப்பு கூட்டு மையத்தின் மூலம் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை மதிப்புக் கூட்டு பொருட்களாக மாற்றி நேரடியாக விற்பனை செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
உதாரணமாக, விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் தேங்காய்களை இந்த மையத்தில் உள்ள சூரிய உலர்த்தி மூலம் உலற வைத்து தேங்காய் எண்ணெய் களாக மாற்றி அதை சந்தையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து அதில் கிடைக்கும் இலாபத்தை முழுமையாக விவசாயிகளுக்கு சென்று சேரும் வகையில் இந்த திட்டம் தொடங்கப் பட்டுள்ளதாக வேளாண் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வேளாண் மதிப்பு கூட்டு மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவரின் வேளாண்மை பிரிவு நேர்முக உதவியாளர் கனகம்மாள் தொடங்கி வைத்த நிலையில், அவருடன் வேளாண் வணிகத்துறை இணை இயக்குநர் சுப்பையா, தென்பொதிகை உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் ஜாகிர் உசேன், திமுக விவசாய தொழிலாளர் அணி தலைவர் பாலாமணி, மீனவர் அணி அமைப்பாளர் முகமது இஸ்மாயில் சிற்றாறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் கணபதி உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென்காசி கோட்ட வேளாண்மை அலுவலர்கள் அருண்குமார், பட்டு ராஜ், கருப்பையா, இப்ராஹிம், பாதுஷா, ஆகியோர் செய்திருந்தனர்.