சங்கரன்கோவில் அருகே 2 வீடுகளில் 53 பவுன் நகை, 9 லட்சம் கொள்ளை
1 min read53 pounds worth of jewelry, 9 lakhs stolen from 2 houses near Sankarankoil
28.2.2024
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டியில் நேற்று இரண்டு ஆசிரியர்களின் வீடுகளில் பட்டப்பகலில் கதவை உடைத்து உள்ளே புகுந்து மொத்தம் 53 பவுன் நகை மற்றும் ரூ. 9 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள கலிங்கப்பட்டியைச் சேர்ந்த வர் தினகரன் (வயது 52). இவர் அதேபகுதியில் டிராக்டர் ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார் .இவரது மனைவி கண்ணகி, அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இதே போல் இவர் களுக்கு எதிர் வீட்டில் வசித்து வரும் லட்சுமி என்பவர் சுவாமிநாதபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று காலை ஆசிரியைகள் இருவரும் பள்ளிக்கு பணிக்கு சென்றனர். இதேபோல் நினகரனும் கடையை திறக்கச் சென்றார்.
இந்நிலையில் நேற்று மதியம் ஆசிரியை லட்சுமி தற்செயலாக வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்குள்ள பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது அங்கு திரண்டு வந்த பொது மக்கள் எதிரே தினகரன் வீட்டில் உள்ள சிசி டிவியில் பதிவான காட்சிகளை பார்த்தால் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் குறித்து தெரியவரும் எனக்கூறியதோடு தினகரனை வீட்டுக்கு வருமாறு செல்போனில் அழைத்துள்ளனர். அதன்பேரில் விரைந்துவந்த தினகரன் தனது வீட்டிலும் பின்பக்க கதவு உடைக் கப்பட்டிருந்தது கண்டு பதறினார்.
பின்னர் வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 47 பவுன் நகை மற்றும் ரூ.8 லட்சம் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அளித்த தகவலை அடுத்து சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதிர் மற்றும் கரிவலம் வந்தநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீடுகளை பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.
அதனைத் தொடர்ந்து வருகை தந்த கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்து சென்றனர்.
சங்கரன் கோவில் அருகே கலிங்கப்பட்டியில் ஒரே தெருவில் உள்ள ஆசிரியர்கள் இருவரது வீடுகளை பட்டப்பகலில் உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் மொத்தம் 53 பவுன் நகை மற்றும் ரூ. 9 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள் ளனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிந்துள்ள கரிவலம்வந்த நல்லூர் போலிசார் மர்மநபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.