தென்காசியில் நீதிபதிகள் பங்கேற்ற சமரச நாள் வார விழா விழிப்புணர்வு பேரணி
1 min read
Reconciliation Day Week Festival Awareness Rally attended by Judges in Tenkasi
9.4.2024
தென்காசியில்l நடைபெற்ற சமரச நாள் வார விழா விழிப்புணர்வு பேரணியில் முதன்மை மாவட்ட நீதிபதி ராஜவேலு உட்பட 6 நீதிபதிகள் கலந்து கொண்டனர்.
நீதிமன்றங்களில் சமரச மையங்கள் செயல்பட்டு வருகின்றன. வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் நேரடியாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமோ ஆஜராகும் போது. சம்பந்தப்பட்ட வழக்கை சமரச மையத்திற்கு அனுப்ப கோரலாம். சமரச மையத்தில் வழக்கின் இருதரப்பினரும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தலாம் வழக்கறிஞர்களும் பங்கு கொண்டு உதவலாம். பயிற்சி பெற்ற சமரசர்கள் சமரச பேச்சுவார்த்தைக்கு ஏதுவாக வழிகாட்டுவார்கள். சமரச மையத்தில் நடைபெறும் அனைத்து பேச்சுவார்த்தைகளும் இரகசியம் காக்கப்படும்.
அது வழக்கை எந்த வகையிலும் பாதிக்காது. சமரசரத்தின் மூலம் வழக்கு சுமூகமாக தீர்க்கப்பட்டால் நீதிமன்றக் கட்டணம் வழக்கு தொடுத்தவருக்கு திரும்ப ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிடும். சமரசம் ஏற்படவில்லை என்றால், வழக்கின் வாதத்தை இருதரப்பினரும் நீதிமன்றத்தின் முன் தொடரலாம்.
இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமரச நாள் வார விழா ஏப்.8ம் தேதி முதல் 12ந் தேதி வரை கொண்டாடப் படுகிறது . இதனை முன்னிட்டு நேற்று (8ம் தேதி) தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து அரசு போக்குவரத்து கழக பணிமனை வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
முதன்மை மாவட்ட நீதிபதி ராஜவேலு தலைமை தாங்கி
கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.
கூடுதல் மாவட்ட நீதிபதி அனுராதா, தலைமை குற்றவியல் நீதிபதி மனோஜ்குமார், ஒருங்கிணைப்பாளர்
முதன்மை சார்பு நீதிபதி மாரீஸ்வரி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பாஸ்கர், குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி பொன் பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழிப்புணர்வு பேரணியில் வழக்கறிஞர்கள் சங்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகள், மூத்த வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள், நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள், தங்கப்பழம்
சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
பேரணியின் போது பொதுமக்களிடையே சமரசம் நாடுவீர் என்ற தலைப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. மேலும் விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டன.