ரம்ஜானை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
1 min read
Goats sold for Rs 3 crore in Melapalayam market ahead of Ramzan
9.4.2024
நெல்லை மாவட்டத்தில் மிகவும் பிரபலமான கால்நடை சந்தையாக மேலப்பாளையம் கால்நடை சந்தை இருந்து வருகிறது. தென் மாவட்டங்களை பொறுத்தவரை எட்டயபுரம் கால்நடை சந்தைக்கு அடுத்தபடியாக இந்த மேலப்பாளையம் சந்தையில் விற்பனை அதிகமாக நடந்து வருகிறது.
இங்கு வாரத்தில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நெல்லை சுற்று வட்டார பகுதிகள், ஆலங்குளம், தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஆடுகளை விவசாயிகளும், வியாபாரிகளும் கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை மற்றும் சித்திரை மாதத்தில் கோவில் திருவிழாக்கள் அதிகம் இருப்பதால் மேலப்பாளையம் சந்தையில் இன்று ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்தது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஆடுகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
இன்று அதிகாலையில் இருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களும், பொதுமக்களும் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை வாங்கி சென்றுள்ளனர் என்று வியாபாரிகள் கூறினர். இதனால் ஆடு விற்பனையானது சுமார் ரூ.3 கோடி அளவுக்கு இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஒவ்வொரு ஆடுகளும் குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரம் முதல் விலை போனது. கொங்கு ரக கிடாக்கள் 2 சுமார் ரூ.60 ஆயிரம் வரை விலை போனது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ரம்ஜான் பண்டிகை நெருங்குவதால் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் சந்தை பகுதியில் குவிந்தனர். இதனால் அந்த சாலை முழுவதும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி காணப்பட்டது.