விபத்தில் சிக்கியவருக்கு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் உடனடி ஆபரேஷன்- கலெக்டர் பாராட்டு
1 min read
Immediate operation at Tenkasi Govt Hospital for the accident victim – Collector Appreciation
10.4.2024
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே நேற்று அதிகாலையில் நடைபெற்ற விபத்தில் படுகாயமடைந்த திருப்பூர் பெண்மணிக்கு, தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உடனடியாக உயிர் காக்கும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனை கண்காணிப்பாளர் இரா.ஜெஸ்லின் மற்றும் மருத்துவர்களை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கடையநல்லூர் அருகே திருப்பூரில் இருந்து தென்காசி வந்த பேருந்து அந்த பகுதியில் பழுதாகி நின்ற லாரி மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டது .
இந்த விபத்தில் ஒருவர் பலியானார்.மேலும் 15 க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர்.இதில் சுமார் 10 பயணிகள் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையிலும் சிலர் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருப்பூரைச் சேர்ந்த 37 வயது உதயா என்ற பெண்ணுக்கு, இடது கால் மற்றும் இடது கைகளில் எலும்புகள் பல துண்டுகளாக உடைந்து சேதம் அடைந்திருந்தது.
தென்காசி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவினர், மாவட்ட அரசு மருத்துவ மனை கண்காணிப்பாளர் இரா.ஜெஸ்லின் வழிகாட்டுதலின்படி பயணி உதயாவிற்கு உடனடியாக எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்ய தீர்மானிக்கப்பட்டது.
அவருக்கு இன்னுயிர் காப்போம் 48 திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்வதற்கான அனைத்து பரிசோதனைகள் மற்றும் ஏற்பாடுகள் அரசு மருத்துவர் களால் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் இரா.ஜெஸ்லின், மது, மயக்க மருத்துவர் நீத்து அடங்கிய குழு வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை செய்தனர்.
அதனைத் தொடர்ந்து நோயாளி முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட வார்டில் நலமுடன் இருக்கிறார்.
தகவலறிந்த சுகாதார நலப் பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா தென்காசி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு மற்றும் எலும்பு முறிவு மருத்துவ குழுவினரை பாராட்டி, சிறப்பாக செயல்பட்டு வரும் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள் தெரிவித்தார்.
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் நேற்று காலை உடனடியாக மருத்துவமனை க்கு வந்து வாகன விபத்தில் காயமடைந்த பெண்மணிக்கு உடனடியாக எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் மருத்துவக் குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் அனைத்து நோயாளி களையும் பார்த்து ஆறுதல் கூறினார். பணியில் இருந்த மருத்துவ குழுவினரிடம் வாகன விபத்தில் காயமடைந்த அனைத்து நோயாளிகளுக்கும் சிறப்பாக சிகிச்சை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
இதைப் பற்றி தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவமனை கண்காணிப்பாளர் இரா.ஜெஸ்வின் கூறும்போது தென்காசி மருத்துவமனையில் விடுமுறை தினங்களிலும் அவசர சிகிச்சை பிரிவுகள் முழு அளவில் இயங்கி வருகிறது சிக்கலான பொது அறுவை சிகிச்சைகள் 24 மணி நேரமும், முதலமைச்சரின் இன்னுயிர் காப்போம் திட்டம் மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார்.