பிரசார மேடையில் உடுக்கை வாசித்த பிரதமர் மோடி
1 min read
Prime Minister Modi recited Uduk on the campaign platform
11/4/2024
பாராளுமன்ற தேர்தலுக்காக பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
பல்வேறு மாநிலங்களில் ரோடு ஷோ, பேரணி மற்றும் பிரசாரங்கள் செய்தும் வருகிறார்.
இதற்கிடையே, உத்தரகாண்ட் மாநிலத்தின் கர்வால் பகுதியில் உள்ள ஹரித்வார், தெஹ்ரி கர்வால் மற்றும் பவுரி கர்வால் ஆகிய 3 மக்களவை தொகுதிகளில் ரிஷிகேஷில் நடைபெறும் தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ரிஷிகேஷில் நடைபெற்ற பேரணி நடைபெறும் இடத்துக்கு பிரதமர் மோடி இன்று சென்றார். அங்கு அவருக்கு முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி உடுக்கை ஒன்றை பரிசாக அளித்தார்.
பரிசைப் பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, அந்த உடுக்கையை அடித்து மகிழ்ந்தார். அதன்பின் பேரணியில் உரையாற்றினார்.
ஏப்ரல் 2-ம் தேதி உதம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள ருத்ராபூரில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பேசினார். தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு உத்தரகாண்டில் அவர் நடத்தும் இரண்டாவது பேரணி இது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி இன்று உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாட்டில் நிலையற்ற மற்றும் பலவீனமான அரசாங்கம் இருந்தபோதெல்லாம் எதிரிகள் பயங்கரவாதத்தை பரப்புவதற்கு அதை சாதாகமாக பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், மோடி தலைமையின் கீழ் வலுவான அரசாங்கம் அமைந்த பிறகு, நமது படைகள் பயங்கரவாதிகளை அவர்களுடைய இடத்திலேயே வீழ்த்தின.
70 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், முத்தலாக்கிற்கு எதிராக சட்டம் நிறைவேற்றல், ஒரே ரேங்க் ஒரே பென்சன், சட்டமன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு போன்ற சட்டங்களை நிறைவேற்றும் தைரியத்தை வலுவான பா.ஜனதா அரசு பெற்றது.
பலவீனமான காங்கிரஸ் அரசாங்கத்தால் கடந்த காலங்களில் எல்லையில் கட்டமைப்புகளை வலுப்படுத்த முடியவில்லை. தற்போது எல்லை அருகே சாலைகள், சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டுள்ளன.
ஊழல்வாதிகள் நாட்டை கொள்ளை அடிப்பதை தடுத்து நிறுத்தியதால், அவர்கள் தனக்கு எதிராக உச்சபட்ச கோபத்தில் இருக்கிறார்கள். அவர்கள் சக்தியை நீக்குவதாக சொல்கிறார்கள். இதற்கு உத்தரகாண்ட் மக்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
ஐந்து மக்களவை தொகுதிகளை கொண்ட உத்தரகாண்டில் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது.