இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புகிறோம்: ரணில் விக்ரமசிங்கே பேச்சு
1 min readWe want to strengthen economic cooperation with India: Ranil Wickramasinghe speech
26.4.2024
நமது அண்டை நாடான இலங்கையில் கடந்த 2022-ம் ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
இதனை சமாளிக்க இந்தியா இலங்கைக்கு கடனுதவிகளை வழங்கியதுடன், இலங்கையில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்யும் எனவும் உறுதியளித்தது.
அந்த வகையில் இந்தியாவின் பிரபல ஐடிசி குழுமம் இலங்கை தலைநகர் கொழும்புவில் பல ஆயிரம் கோடி செலவில் பிரமாண்டமான சொகுசு ஓட்டலை அமைத்துள்ளது. இந்த ஓட்டலை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நேற்று திறந்து வைத்தார். அதன் பின்னர் நடைபெற்ற விழாவில் ரணில் விக்ரமசிங்கே பேசியதாவது:-
இந்தியா இப்போது வளர்ந்து வரும் பொருளாதார ஜாம்பவான்களில் ஒன்றாக உள்ளது.
இதன் மூலம் இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது. குறிப்பாக சுற்றுலாத் துறையை முன்னிலைப்படுத்தி இந்தியாவுடன் அதிக பொருளாதார ஒத்துழைப்பை விரைவுபடுத்த விரும்புகிறோம். அதிக ஒத்துழைப்பால் இரு நாடுகளும் ஆதாயம் அடையும்.
இந்த ஓட்டல் இலங்கைக்கு குறிப்பாக இந்தியாவில் இருந்து சுற்றுலாவை அதிகரிக்க உதவும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
நமது பொருளாதாரத்தை எப்படி ஒருங்கிணைத்து நாம் நெருங்கி வருகிறோம் என்பது குறித்து கடந்த ஆண்டு நானும், பிரதமர் மோடியும் கையெழுத்திட்ட தொலைநோக்கு அறிக்கையின் ஒரு பகுதியாக இவை உள்ளன.
பல வருடங்களாக இலங்கை, விடுமுறையை கழிப்பதற்கு ஏற்ற இடமாக இருந்து வருகிறது என்பதில் எனக்கு சந்தேகமில்லை. எதிர்காலத்தில் பெங்களூரு, சென்னை அல்லது ஐதராபாத்தில் உள்ள ஒருவர் இந்தியாவின் வடபகுதிக்கு செல்வதை விட விமானத்தில் ஏறி இங்கு (இலங்கை) வருவது எளிதாக இருக்கும்.
இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே பேசினார்.