விவேகானந்தர் மண்டபம் – திருவள்ளுவர் சிலை இடையே அமைக்க கூண்டு பாலம் தயார்
1 min readA cage bridge is ready to be constructed between Vivekananda Mandapam and Thiruvalluvar statue
2.5.2024
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் வருடத்துக்கு 75 லட்சம் சுற்றுலா பணிகள் வருகை தருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்வையிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இயற்கையாகவே விவேகானந்தர் நினைவு மண்டப படகு தளத்தில் ஆழம் அதிகமாக உள்ளது. ஆனால் திருவள்ளுவர் சிலை படகு தளத்தில் ஆழம் குறைவாகவும், படகு நிறுத்தும் இடத்தில் அதிகப்படியான பாறைகளும் உள்ளன.
இதனால் கடலில் நீரோட்டம் குறைவான காலங்களில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து திருவள்ளுவர் சிலைக்கு மட்டும் இயக்கப்படுவதில்லை. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது.
இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே இணைப்பு பாலம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளும் பல்வேறு தமிழ் அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தன. இதைத்தொடர்ந்து விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டுபாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன் பயனாக ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. இந்த கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும் 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது. பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும்போது தாங்கள் நடந்து செல்லும் பாதையின் கீழே கடல் அலையை ரசிக்கும் வண்ணமாக வெளிநாடுகளில் அமைக்கப்பட்டு உள்ளது போல இந்த கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப்பட உள்ளது.
இந்த பாலத்துக்கான கட்டுமான பணிகள் திருவள்ளுவர் சிலை அமைந்து உள்ள பாறையில் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இதன் மறுபுறம் அமைந்து உள்ள விவேகானந்தர் பாறையிலும் கண்ணாடி கூண்டு இணைப்பு பாலத்துக்கான பணிகள் நடைபெற்றன. மேலும் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைப்பதற்காக நடுக்கடலில் 6 ராட்சத தூண்கள் அமைக்கும் பணியும் நடைபெற்றது.
விவேகானந்தர் பாறை அமைந்துள்ள கடல் பகுதியில் 3 ராட்சத தூண்களும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துள்ள கடல் பகுதியில் 3 ராட்சத தூண்களும் அமைக்கும் பணி தீவிரமாக நடந்தது. கடல் நடுவில் அமைக்கப்பட்டு உள்ள இந்த ராட்சத தூண்கள் ஒவ்வொன்றும் தலா 27 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. கடலில் அமைக்கப்பட்டுஉள்ள இந்த ராட்சத தூண்கள் கடல் உப்பு காற்றினால் பாதிக்காத வகையில் ரசாயன கலவை கலந்த சிமெண்ட் காங்கிரீட் மூலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் தற்போது திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையில் பாலத்தை இணைக்கும் வகையில் 27 அடி உயரத்துக்கு ராட்சத தூண் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ள நிலையில் புதுச்சேரியில் இந்த இணைப்பு பாலத்துக்கான கூண்டு ஸ்டீன்லெஸ் கம்பிகள் மூலம் வடிவமைத்து தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த கூண்டு மொத்தம் 222 டன் எடை கொண்டதாகும்.
கடல் உப்பு காற்றினால் துருப்பிடிக்காத வகையில் ஸ்டீன்லெஸ் கம்பிகள் மூலம் இந்த கூண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 101 பாகங்களாக இந்த கூண்டு தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த கூண்டில் தற்போது வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. வர்ணம் பூசும் பணியும் முடிந்ததும் இந்த கூண்டு தனித்தனியாக பிரிக்கப்பட்டு கன்னியாகுமரிக்கு விரைவில் கொண்டு வரப்பட உள்ளது.
அதன் பிறகு விவேகானந்தர் மண்டபத்துக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள ராட்சத தூண்கள் மீது தொழில் நுட்ப வல்லுனர்கள் மூலம் இந்த 101 பாகங்களும் இணைக்கப்பட்டு கூண்டு பொருத்தப்பட உள்ளது. புதுச்சேரியில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கூண்டை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாஸ்கரன், உதவி கோட்ட பொறியாளர் ஹெரால்டு ஆன்றனி, உதவி பொறியாளர்கள் அரவிந்த், ஜோஸ் ஆன்றனி சிறில் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.