தென்தமிழகத்தின் முதலாவது பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேலாயுதன் மரணம்
1 min readSouth East’s first BJP MLA Death of Velayuthan
8.5.2024
குமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன். பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தென் தமிழகத்தில் இருந்து முதன் முறையாக வெற்றி பெற்ற இவர், இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73.
தனது 13-வது வயதில் 1963-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்த அவர், 1982-ம் ஆண்டு நடந்த மண்டைக்காடு கலவரத்தை தொடர்ந்து இந்து முன்னணி நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். 1989-ல் 39-வது வயதில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தனது நிலத்தை விற்றும், கோவில்களில் உண்டியல் அமைத்தும் டெபாசிட் தொகையை கட்டி தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
இருப்பினும் அந்த தேர்தலில் அவருக்கு 4-வது இடமே கிடைத்தது. 1991 சட்டமன்ற தேர்தலிலும் தோல்வியடைந்த அவர், 3-வது முறையாக 1996 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் தென்னிந்தியாவில் முதல் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினராக தமிழக சட்டசபைக்கு சென்றார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, இவரை சிறந்த சட்டமன்ற உறுப்பினர் என பாராட்டி உள்ளார். அதன்பிறகு 2001, 2006 சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேலாயுதன், பா.ஜ.க மாநில துணைத்தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். 2006-ம் ஆண்டுக்கு பின் அரசியலில் இருந்து விலகி ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இயங்கினார்.
ஒரு கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காக தனது சொந்த ஊரான கருப்புக்கோட்டுக்கு வந்திருந்த நிலையில் தான் வேலாயுதன் நேற்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு கருப்புக்கோடு பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (9-ந்தேதி) காலை 10 மணி அளவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.