காவலர்களுக்கு இலவசப் பயணம் என முதல்-அமைச்சரின் அறிவிப்பை அமல்படுத்த வேண்டும் – அண்ணாமலை கோரிக்கை
1 min readImplementation of Chief Minister’s announcement of free travel for constables – Annamalai demand
22.5.2024
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்து காவலர் ஒருவர் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து அரசுப்பேருந்துகளில் காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் குறித்து விசாரணை நடத்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவிட்டார்
இந்த நிலையில் , இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2021 – 2022 ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், பணி செய்யும் மாவட்டத்துக்குள் பேருந்துகளில் இலவசப் பயணம் என்று, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே அறிவித்துள்ள நிலையில், காவலர் ஆறுமுகப்பாண்டி அவர்களை, இது போன்று துன்புறுத்துவது எந்த விதத்தில் நியாயம்?
முதல்-அமைச்சரின் இந்த மானியக் கோரிக்கை அறிவிப்பு, மூன்று ஆண்டுகள் கடந்தும், போக்குவரத்துக் கழகங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.
உடனடியாக இந்த அறிவிப்பு குறித்து, அனைத்து மாவட்டப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் தெரியப்படுத்துவதோடு, பணி செய்யும் மாவட்டங்களில், காவலர்களுக்கு இலவசப் பேருந்து பயணம் என்ற அறிவிப்பை தமிழகம் முழுவதும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இந்தச் சம்பவத்துக்காக, காவலர் ஆறுமுகப்பாண்டி அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை உட்பட எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.